சர்வதேச நீதிமன்றத்தால் கூட போரை நிறுத்த முடியாது!: இஸ்ரேல் பிரதமர்
சர்வதேச நீதிமன்றத்தால் கூட இந்த போரை நிறுத்த முடியாது என இஸ்ரேல் பிரதமர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் 23,000-த்திற்கும் அதிகமான காஸா மக்களைக் கொன்று குவித்த இஸ்ரேலின் மீது தென்னாப்பிரிக்கா இனப்படுகொலை குற்றச்சாட்டை வைத்தது. சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இரண்டு நாள்களுக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
பொதுவாக, சர்வதேச நீதிமன்றத்திற்கு வரும் வழக்குகளுக்கு உடனடி தீர்ப்பு என்பது இருக்காது. பல ஆண்டுகள் விசாரணை நடைபெறும். எனினும் இந்த வழக்கு, காஸாவில் போரை நிறுத்துவதற்கான ஆணைகளைப் பிறப்பிக்குமா என்ற எண்ணம் உலகலாவிக் காணப்பட்டது.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை தொலைக்காட்சி ஒன்றில் பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, 'போரை யாராலும் நிறுத்த முடியாது. சர்வதேச நீதிமன்றத்தால் கூட நிறுத்தமுடியாது' எனத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: கடலில் ஏவப்பட்ட கணை: வடகொரியாவின் திட்டம் என்ன?
போர் நிறுத்தம் குறித்து எந்த ஆணைகளையும் சர்வதேச நீதிமன்றம் பிறப்பிக்காத நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவை இஸ்ரேல் மதிக்கப்போவதில்லை என வெளிப்படையாக தெரிவித்துள்ளார் நெதன்யாகு.
கடந்த 2020-ல் உக்ரைன் மீதான தாக்குதல்களை ரஷியா நிறுத்திக்கொள்ள வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் இன்றளவும் போர் நிற்காதது குறிப்பிடத்தக்கது.