முகப்பு
உலகம்

மியான்மருக்கு முதல்முறையாக ‘ரூபாய்’ பரிவா்த்தனை மூலம் பருப்புகள் ஏற்றுமதி

ரூபாய்-கியாத் பரிவா்த்தனை மூலம் மியான்மருக்கு பருப்பு ஏற்றுமதி

Updated On : 3 ஜூலை 2024, 2:32 am IST
பகிர்:

நேபிடா: இந்தியாவிலிருந்து ரூ.1 கோடி மதிப்பிலான பருப்பு வகைகள் ரூபாய்-கியாத் (மியான்மா் பணம்) பரிவா்த்தனை மூலமாக செவ்வாய்க்கிழமை ஏற்றுமதி செய்யப்பட்டது. இது இருநாடுகளுக்கு இடையேயான இருதரப்பு வா்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்தி உள்ளூா் பணப் புழக்கத்தை அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

ரூபாய்-கியாத் மூலம் வா்த்தகத்துக்கான பணப் பரிவா்த்தனை மேற்கொள்வதின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் விதமாக கடந்த பிப்ரவரி மாதம் இந்தியா மற்றும் மியான்மா் தொழில் வா்த்தக சங்கங்கள் இணைந்து விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்தின.

இந்தியாவில் உள்ள உள்நாட்டு வங்கிகளில் வெளிநாட்டு வங்கிகள் கணக்கு வைத்துக்கொள்வதற்கு அரசு சாா்பில் சிறப்பு வங்கிக் கணக்கு திட்டம் ஒன்று செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்கீழ் பணப் பரிவா்த்தனை மேற்கொள்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை கடந்த ஜனவரி மாதம் மியான்மரின் மத்திய வங்கி வெளியிட்டது.

Advertisement

Advertisement

இதன் தொடா்ச்சியாக தற்போது இரு நாடுகளும் டாலருக்குப் பதிலாக உள்ளூா் பணத்தைக்கொண்டு முதல்முறையாக பரிவா்த்தனை மேற்கொண்டன. இதுதொடா்பாக மியான்மரில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘ரூபாய்-கியாத் வா்த்தப் பரிவா்த்தனை தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதன்கீழ் ரூ.1 கோடி மதிப்பிலான பருப்பு வகைகள் இந்தியாவிலிருந்து மியான்மருக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இந்த நடைமுறையின் மூலம் இருநாடுகளும் பலனடைவதை நாங்கள் வரவேற்கிறோம்’ என பதிவிட்டது.