குவைத் கட்டடத்தில் தீவிபத்து! 10 இந்தியர்கள் உள்பட 43 பேர் பலி! தமிழர்கள் நிலை என்ன?
குவைத் நாட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரிப்பு
குவைத் நாட்டின் தெற்கிலுள்ள மேங்காஃப் மாவட்டத்தில் அடுக்குமாடிக் கட்டடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் குறைந்தது 43 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பலியானவர்களில் 10 பேர் இந்தியர்கள் எனவும் கூறப்படுகிறது.
புதன்கிழமை அந்நாட்டு நேரப்படி அதிகாலை 4.30 மணிக்கு ஆறு மாடிக் கட்டடத்தின் கீழ்த்தளத்தில் பற்றிய தீ சடசடவென மற்ற தளங்களுக்கும் பரவியுள்ளது. இந்தக் கட்டடத்தில் 195-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கியிருந்ததாகவும் அவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழ்நாடு மற்றும் கேரளத்தை சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. உயிரிழந்தவர்களில் தமிழர்களும் உண்டா, தமிழர்களின் நிலை என்ன என்பது குறித்து விவரங்கள் வெளியாகவில்லை.
கேரளத்தை சேர்ந்த தொழிலதிபர் கேஜி ஆபிரஹாமுக்குச் சொந்தமான கட்டடமென ஆன்மனோராமா தெரிவித்துள்ளது. அவரின் என்பிடிசி நிறுவன சூப்பர் மார்கெட் ஊழியர்களும் இந்தக் கட்டடத்தில் தங்கியுள்ளனர்.
Advertisement
Advertisement
மேலும் 40 பேர் காயமுற்றிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவ்ம் தடயவியல் நிபுணர்கள் தீயில் எரிந்த பகுதிகளில் தடயங்களை சேகரித்து வருவதாகவும் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சம்பவ இடத்தை பார்வையிட்ட குவைத் துணை பிரதமர் பஹத் யூசுப் அல்-சபா இந்த விவகாரத்தில் காவல்துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். கட்டட உடைமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.