மங்கோலியாவில் வரலாறு காணாத வகையில் பெய்யும் கடும் பனி காரணமாக 71 லட்சத்துக்கும் அதிகமான கால்நடைகள் உயிரிழந்தன.
பனிக்காலம் கால்நடைகளின் இனப்பெருக்க காலமாக இருப்பதால், ஊட்டச்சத்து குறைபாடு உள்ள பெண் கால்நடைகளும், அவற்றின் குட்டிகளும் அதிகம் இறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கிழக்கு ஆசியாவின் மங்கோலியாவில் கடும் பனிப் பொழிந்து வருகிறது. 1975ஆம் ஆண்டுக்கு பிறகு இதுவரை இல்லாத வகையில் கடும் பனிப்பொழிவு உள்ளது.
மங்கோலியாவில் கலாசார ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் கால்நடை வளர்ப்பு மிக முக்கிய ஒன்றாக உள்ளது. கால்நடை வளர்ப்பையொட்டியே 80% வேளாண் பொருள்கள் உற்பத்தி நடைபெறுகிறது. நாட்டின் ஜிடிபியில் 11 சதவீதம் கால்நடை பராமரிப்பில் பெறப்படுகிறது.
எனினும் தற்போது பெய்துவரும் பனிப்பொழிவால், கடந்த பிப்ரவரி மாதம் மட்டும் பசுக்கள், ஆடுகள் என 21 லட்சம் கால்நடைகள் உயிரிழந்தன. இது மே மாதம் 71 லட்சமாக உயர்ந்தது. இனப்பெருக்க காலம் என்பதால், ஊட்டச்சத்து குறைபாடுள்ள பெண் கால்நடைகள் அதிகம் இறக்கின்றன.
நாட்டில் 70% குடும்பங்கள் தாங்கள் பராமரித்து வந்த மந்தைகளை இழந்துள்ளன. கடும் பனிப்பொழிவு மற்றும் குளிரால் இறந்த விலங்குகளின் எண்ணிக்கை நாடு முழுவதும் 149 லட்சமாக அதிகரித்துள்ளது. இது நாட்டின் மொத்த விகிதத்தில் 24 சதவீதம் என துணை பிரதமர் எஸ்.அமர்சாய்கான் தெரிவித்தார்.
மங்கோலிய மொழியில் ஜுத் என்பதற்கு பேரழிவு என்பது பொருள். கடும் பனிப்பொழிவு, குளிர் மற்றும் வறட்சியை இது உள்ளடக்கியது. பனிக்காலங்களில் தரைகள் முழுவதும் பனியால் போர்த்தப்பட்டு உள்ளது. பருவம் மாறும்போது கடும் வறட்சி நிலவுவதால், கால்நடைகள் பெரும்பாலும் ஊட்டச்சத்து குறைபாடுகளுடனே இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பனியிலிருந்து காக்கும் வகையில் பாதுகாப்பான இடங்களுக்கு வாகனங்கள் மூலம் கால்நடைகள் அழைத்துச் செல்லப்படுகின்றன. எனினும் பெரிய அளவிலான தொகை இதற்கு செலவாவதால், கால்நடைகளை பராமரிப்பவர்கள், பணத்தை சேமிக்கும் வகையில், பனிக்காலங்களில் அவற்றை மந்தையிலிருந்து திறந்துவிடுகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.