24 மணிநேரத்தில் 97 பாலஸ்தீனர்கள் படுகொலை!
123 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காஸா சுகாதாரத் துறை தகவல்.
இஸ்ரேல் தாக்குதலில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 97 பாலஸ்தீனர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். 123 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காஸா சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் - காஸாவின் ஹமாஸ் படையினருக்கு இடையே கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. காஸாவில் தரைவழியாகவும் நுழைந்து இஸ்ரேல் படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
சமீபத்தில் காஸா நகரத்தின் குவைத் ரவுன்டானா பகுதியில் உணவு விநியோகம் நடைபெற்றுக்கொண்டிருந்த இடத்தை நோக்கி இஸ்ரேல் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். கூட்டமாக இருந்த இடத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில், பலர் படுகாயமடைந்தனர்.
நேற்று முதல், இரண்டாவது முறையாக மக்கள் அதிகம் கூடியுள்ள இடங்களை நோக்கி இஸ்ரேல் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது.
தெற்கு காஸாவின் கான்யூனிஸ் பகுதியில் உள்ள வீடுகளை நோக்கி இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர்.
இஸ்ரேல் தாக்குதலால் பாலஸ்தீனத்தில் இதுவரை 30,631 கொல்லப்பட்டுள்ளதாகவும், 72,043 பேர் படுகாயமடைதுள்ளதாகவும் வாஃபா விசாரணை அமைப்பு தெரிவித்துள்ளது.