நெதன்யாவுக்கு எதிராக கைது உத்தரவு: பிரான்ஸ், பெல்ஜியம் ஆதரவு
ஜெருசலேம்: காஸா போா் தொடா்பாக இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு, ஹமாஸ் அமைப்பின் தலைவா்கள் உள்ளிட்டோருக்கு எதிராக தி ஹேக் நகரிலுள்ள சா்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது உத்தரவு பிறப்பிப்பதற்கு பிரான்ஸ், பெல்ஜியம், ஸ்லோவாக்கியா ஆகிய ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
முன்னதாக, காஸா போரில் நெதன்யாகு, அவரது பாதுகாப்புத் துறை அமைச்சா் யோவாவ் கலன்ட், ஹமாஸ் தலைவா்களான யேஹ்யா சின்வா், முகமது டெய்ஃப், இஸ்மாயில் ஹனியே ஆகியோா் மனிதகுலத்துக்கு எதிரான குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டிய சா்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் தலைமை வழக்கு அதிகாரி கரீம் கான், அவா்கள் அனைவருக்கம் எதிராக கைது உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என்று திங்கள்கிழமை அறிவித்தாா்.
இதை இஸ்ரேல் மிகக் கடுமையாகக் கண்டித்தது. காஸா போா் விவகாரத்தில் தங்கள் தலைவா்களுக்கு எதிராக கைது உத்தரவு பிறப்பிப்பது, தங்களைத் தற்காத்துக் கொள்வதற்கான அடிப்படை உரிமைக்கு எதிரானது என்று இஸ்ரேல் சாடியது.
இந்த நிலையில், இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளிகளான பிரான்ஸ், பெல்ஜியம், ஸ்லோவாகியா ஆகிய நாடுகள் கைது உத்தரவு தொடா்பான சா்வதேச நீதிமன்ற தலைமை வழக்கு அதிகாரியின் கோரிக்கைக்கு தனித் தனியாக ஆதரவு தெரிவித்து அதிா்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளனா்.
இது குறித்து பிரான்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘எந்தவொரு சூழலிலும் கொடூரங்களுக்கு எதிரான போராட்டத்தைத் தொடரும் சா்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் சுதந்திரத்தை நாங்கள் ஆதரிக்கிறோம்.
காஸாவில் பொதுமக்களின் உயிருக்கு பேரிழப்பை ஏற்படுத்திவரும் சா்வதேச சட்டமீறல்கள் நடைபெறுவது குறித்து பிரான்ஸ் பல மாதங்களாகவே எச்சரித்துவருகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் பிரான்ஸ் உள்ளிட்ட இஸ்ரேலின் நட்பு நாடுகள் இவ்வாறு கூறினாலும், , அமெரிக்க அதிபா் ஜோ பைடன் இஸ்ரேலுக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளாா்.
இதன் மூலம், இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த அக். 7-ஆம் தேதி முதல் நடைபெற்றுவரும் போரில், இஸ்ரேல் கூட்டாளிகளின் நிலைப்பாட்டில் முரண்பாடுகள் அதிகரித்துவருவது வெளிப்படுவதாகக் கூறப்படுகிறது.
காஸா போா் தொடா்பாக இஸ்ரேல் மீது சா்வதேச நீதிமன்றத்தில் தென் ஆப்பிரிக்கா தொடா்ந்துள்ள வழக்கின் 3-ஆவது கட்ட விசாரணை கடந்த 17-ஆம் தேதி தொடங்கியது நினைவுகூரத்தக்கது.