அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!
ஈரான் பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைக்க பிரான்ஸ் வலியுறுத்தல்!
அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையேயான தாக்குதல் நடவடிக்கைகள் சர்வதேச அளவில் அமைதிக்குச் சீர்குலைவு விளைவிக்கக்கூடுமென பிரான்ஸ் அதிபர் கவலை தெரிவித்திருக்கிறார்.
அமெரிக்கா, இஸ்ரேல்- ஈரான் இடையேயான ராணுவ தாக்குதல்கள் தொடங்கியதையடுத்து மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் அசாதாரண சூழல் நிலவுகிறது. குறிப்பாக, இஸ்ரேலிலும் ஈரானிலும் அதன் அண்டை நாடுகளிலும் மக்கள் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறது. இந்த நிலையில், ஈரான் பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைக்க பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வலியுறுத்தியுள்ளார். அவர் தெரிவித்திருப்பதாவது :
‘அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கும் இடையேயான போர், சர்வதேச அமைதிக்கும் பாதுகாப்புக்கும் கடும் விளைவுகளை அளிக்கிறது.
முடிவெடுக்க வேண்டிய இத்தருணத்தில், எங்களது தேச எல்லை, குடிமக்கள் மற்றும் தேச நலன்சார் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான ஒவ்வொரு நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், எங்களது நெருங்கிய கூட்டாளிகளைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் அவர்கள் வேண்டிக் கேட்டுக்கொண்டால் பிரான்ஸ் தயாராக உள்ளது.
அதிகரிக்கும் தாக்குதல்கள் அனைவருக்குமே ஆபத்தானது. இது நிறுத்தப்பட்ட வேண்டும்.
தமது அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டங்களை நிறுத்துவதற்கான மற்றும் அதன் பிராந்திய நிலைத்தன்மையை சீர்குலைக்கும் நடவடிக்கைகளை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தையில் நல்ல நம்பிக்கை வைத்து ஈடுபடுவதைத் தவிர்த்து இப்போது அதற்கு வேறு வழியில்லை என்பதை ஈரானிய தலைமைப் புரிந்துகொள்ள வேண்டும்.
மத்திய கிழக்கில் உள்ள அனைவரது பாதுகாப்புக்கும் இது கட்டாயம் அவசியமாகிறது. ஈரானிய மக்களும் தங்களது எதிர்காலத்தை சுதந்திரமாக கட்டமைக்க வேண்டும். ஈரானிய தலைமையால் நிகழ்த்தப்பட்ட படுகொலைகளால் அத்தலைமை தகுதி இழந்துவிட்டது. மக்களுக்கே அதிகாரம் விரைவில் வழங்கப்பட வேண்டும்.
பிரான்ஸ் தமது சர்வதேச பொறுப்புகளைப் பற்றிய விழிப்புணர்வுடனும், தமது கொள்கைகள் மீதான நம்பிக்கையின்பாலும் உறுதிபூண்டு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் அவசர ஆலோசனைக் கூட்டத்துக்கு அழைக்கிறது. இது குறித்து எங்களது ஐரோப்பிய கூட்டாளிகளுடனும் மத்திய கிழக்கில் உள்ள தோழமை நாடுகளுடனும் நான் நெருங்கிய தொடர்பில் இருக்கிறேன்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.