கொண்டாட்டத்தில் டிரம்ப் ஆதரவாளர்கள்!
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் தொடர்ந்து முன்னிலையில் உள்ளதையடுத்து அவரது ஆதரவாளர்கள் கொண்டாட்டம்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் தொடர்ந்து முன்னிலையில் உள்ளதையடுத்து அவரது ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை மாலையில் தொடங்கி புதன்கிழமை காலை வரையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, புதன்கிழமை காலை 5.30 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டது.
மொத்தமுள்ள 50 மாகாணங்களில் கிட்டத்திட்ட 40-க்கும் மேற்பட்ட மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்துள்ளது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க | வெற்றிக்கு அருகில் டிரம்ப்! கமலா தொடர் பின்னடைவு!
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் 247 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளார். இதனால் அடுத்த அதிபராகும் வாய்ப்பு டிரம்புக்கு அதிகமுள்ளது.
அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரும் தற்போதைய துணை அதிபருமான கமலா ஹாரிஸ் 214 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளார்.
வாக்கு சதவிகிதத்தை பொறுத்தவரை டிரம்ப் 51.2%, கமலா 47.4% பெற்றுள்ளனர்.
இதையடுத்து அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள வெஸ்ட் பாம் பீச்சில் டிரம்ப்பின் ஆதரவாளர்கள் கூடியுள்ளனர். ஒருவரையொருவர் கட்டியணைத்து மகிழ்ச்சியைப் பரிமாறியும் தொப்பிகளை காற்றில் வீசி எறிந்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் பலரும் வந்துகொண்டிருக்கின்றனர்.
டொனால்டு டிரம்ப்பும் வெஸ்ட் பாம் பீச்சுக்கு வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் வெற்றிக்குத் தேவையான 270 இடங்களுக்கு மேல் டிரம்ப் முன்னிலை பெற்று அவர் வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகமான ஃபாக்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.