சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பில் ஆர்மீனியாவுக்கு அங்கீகாரம் -மத்திய வெளியுறவுத்துறை
இந்தியாவின் முயற்சியில் உருவாக்கப்பட்ட சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பில் ஆர்மீனியாவுக்கு அங்கீகாரம்
இந்தியா, பிரான்ஸ் கூட்டு முயற்சியால் அமைக்கப்பட்ட சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பில் ஆர்மீனியாவுக்கு முழுநேர உறுப்பினராக அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
பருவநிலை மாற்றம் தொடர்பான சவால்களை எதிர்கொள்ளவும் மற்றும் சூரிய ஆற்றல் உற்பத்திகளை பெருக்கவும் இந்தியாவும் பிரான்ஸும் இணைந்து சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பை உருவாக்கின. சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பை அமைப்பதற்கான தீர்மானத்துக்கும் ஒப்பந்தத்துக்கும் உலக நாடுகளை அணுகி அதற்கான அடித்தளம் அமைத்தது இந்திய வெளியுறவு விவகாரங்களுக்கான அமைச்சகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கான முன்மொழிவை கடந்த 2015-ஆம் ஆண்டு முதன்முதலாக கொண்டுவந்தவர் பிரதமர் நரேந்திர மோடி. இதனையடுத்து அதே ஆண்டில் நவம்பர் மாத இறுதியில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இதன் தலைமையகம் ஹரியானா மாநிலம் குருகிராமில் அமைந்துள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இந்த கூட்டமைப்பின் 104-ஆவது முழுநேர உறுப்பினராக அர்மேனியா இணைந்துள்ளதாக இந்தியாவிலுள்ள ஆர்மீனியா தூதரகம் அதிகாரப்பூர்வமாக இன்று(நவ. 21) அறிவித்துள்ளது. முன்னதாக, இதற்கான ஒப்பந்தத்தில் கடந்த 16-ஆம் தேதி ஆர்மீனியா கையெழுத்திட்டது.
இந்தியாவுக்கான அர்மேனிய தூதர் வாஹன் அஃபேயான் அந்நாட்டின் அதிபர் வாஹன் கச்சாடர்யான் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தை, பொருளாதார தூதரகம் மற்றும் பன்முனை பொருளாதார உறவுகள் துறைக்கான தலைவர் அபிஷேக் சிங்கிடம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் வைத்து வழங்கினார். இதனை பெற்றுக்கொண்ட அபிஷேக் சிங், ஆர்மீனியா முழுநேர உறுப்பினராக அங்கீகரிக்கப்பட்டுள்ளதற்கான சான்றிதழை அவரிடம் வழங்கினார்.