நஸ்ரல்லாவின் மருமகனை கொன்றது இஸ்ரேல் படை!
உயிரிழந்த ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லாவின் மருமகன் கொல்லப்பட்டது பற்றி..
சிரியாவில் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவராக இருந்த ஹசன் நஸ்ரல்லாவின் மருமகன் கொல்லப்பட்டார்.
சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் நடத்தப்பட்ட தாக்குதலில் நஸ்ரல்லாவின் மருமகன் ஹசன் ஜாபர் காசிர் உள்பட 2 லெபனானைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நஸ்ரல்லாவின் மருமகன் கொலை
டமாஸ்கஸில் ஹிஸ்புல்லா மற்றும் ஈரானிய படையினர் தங்கியிருந்த 3 அடுக்குமாடி குடியிருப்பை குறிவைத்து இஸ்ரேல் படையினர் புதன்கிழமை தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அந்த குடியிருப்பின் முதலாவது மாடியை ஏவுகணை தாக்கியதில் 2 லெபனான் நாட்டினர் மற்றும் சிரியாவைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார்.
இந்த தாக்குதலில் உயிரிழந்தவரில் ஒருவர் கடந்த வாரம் கொல்லப்பட்ட நஸ்ரல்லாவின் மருமகன் ஹசன் ஜாபர் காசிர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சிரியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சகமும் மூன்று பேர் கொல்லப்பட்டதாகவும், 3 பேர் பலத்த காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
தரைவழித் தாக்குதல்
லெபனான் மற்றும் சிரியாவில் ஹிஸ்புல்லா அமைப்பினர் பதுங்கியிருந்த கட்டடங்கள் மீது இஸ்ரேல் படையினர் கடந்த சில வாரங்களாக வான்வழித் தாக்குதல் நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், கடந்த இரண்டு நாள்களாக தரைவழித் தாக்குதலில் இஸ்ரேல் படையினர் தொடங்கியுள்ளனர். ஹிஸ்புல்லாக்கள் இருப்பிடத்தைத் தேடு ரோந்து சென்று, அவர்களை சுட்டுக் கொன்று வருகின்றனர்.
நஸ்ரல்லா கொலை
லெபனானில் கடந்த வாரம் இஸ்ரேல் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில், ஹிஸ்புல்லா அமைப்பை தோற்றுவித்தவா்களில் ஒருவரும், அந்த அமைப்பின் தலைவருமான ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார்.
அவரை கொன்றதற்கு பழிதீர்க்கும் செயலாகவே, செவ்வாய்க்கிழமை இரவு இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகளை வீசி கடுமையான தாக்குதலை நடத்தியது குறிப்பிடத்தக்கது.