இஸ்ரேல் அரசுக்கு எதிராக மக்கள் பெருந்திரளாகப் போராட்டம்!
பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான அரசுக்கு எதிராக மக்கள் வீதிகளில் போராட்டம்
டெல் அவிவ்: இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான அரசுக்கு எதிராக மக்கள் வீதிகளில் பெருந்திரளாகத் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டெல் அவிவ் நகரில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். சனிக்கிழமையன்று(செப்.14) அரசு அலுவலகங்களையும், ராணுவ தலைமையகத்தையும் முற்றுகையிட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காஸாவில் சிறைவைக்கப்பட்டுள்ள இஸ்ரேல் மக்களை விடுவிக்க அரசு உரிய நடவடிக்கைகளில் ஈடுபட போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
பிரதமர் நெதன்யாகு, ஹமாஸ் அமைப்புடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, அமைதி திரும்பிடவும், ஹமாஸால் பிணைக் கைதிகளாக சிறைபிடிக்கப்பட்டுள்ள இஸ்ரேலை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோரை விடுவிக்க நடவடிக்கைகளை எடுக்கவும் மக்கள் வலியுறுத்தினர்.
காஸாவில் அமைதி திரும்பாமலிருக்க பிரதமர் நெதன்யாகுவே முக்கிய காரணமென பெரும்பாலானோர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். போரை காரணமாக முன்வைத்து, பிரதமர் பதவியில் நீடிப்பதில் நெதன்யாகுவுக்கு விருப்பமிருப்பதாகவும் பகிரங்கமாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.