டிரம்புடன் தொலைபேசியில் பேசிய கமலா ஹாரிஸ்!
துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து டிரம்புடன் கமலா ஹாரிஸ் நலம்விசாரித்தார்.
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பை தொலைபேசியில் தொடர்பு கொண்டு துணை அதிபர் கமலா ஹாரீஸ் செவ்வாய்க்கிழமை பேசியுள்ளார்.
அதிபர் தேர்தலில் போட்டியிடும் இருவருக்கும் இடையே வார்த்தைப் போர் நடைபெற்று வரும் நிலையில், இவர்களின் உரையாடல் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், டிரம்ப்பிடம் நேரடியாக தொலைப்பேசியில் உரையாடிய கமலா ஹாரிஸ், துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து கேட்டறிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
துப்பாக்கிச் சூடு
புளோரிடாவில் வெஸ்ட் பாம் கடற்கரை அருகே உள்ள டிரம்புக்கு சொந்தமான கோல்ஃப் மைதானத்தில் அவர் ஞாயிற்றுக்கிழமை (உள்ளூர் நேரம்) விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது, மைதானத்துக்கு வெளியே இரண்டு நபர்களுக்கு இடையே துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதையடுத்து, உடனடியாக டிரம்ப் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களில் ஒருவரை கைது செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், தான் பாதுகாப்பாக இருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
டிரம்ப்புடன் கமலா பேச்சு
இந்த நிலையில், நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் முன்னாள் அதிபர் டிரம்பை தொடர்பு கொண்டு, ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரும் தற்போதைய துணை அதிபருமான கமலா ஹாரிஸ் பேசியுள்ளார்.
இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், “துணை அதிபர் கமலா ஹாரிஸ், இன்று பிற்பகல் முன்னாள் அதிபர் டிரம்பை தொலைபேசியில் அழைத்து அவரின் பாதுகாப்புக் குறித்துப் பேசினார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.