சிங்கப்பூரில் இந்தியத் தொழிலாளிக்கு ரூ. 25000 அபராதம்! ஏன்?
பொது இடத்தில் திறந்த வெளியில் மலம் கழித்தவருக்கு அபராதம் விதித்த சிங்கப்பூர் நீதிமன்றம்
பொது இடத்தில் திறந்த வெளியில் மலம் கழித்தவருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.
சிங்கப்பூரில் கட்டுமானத் தொழிலாளியாக பணிபுரிந்து வரும் இந்தியாவைச் சேர்ந்த ராமு சின்னராசா என்பவர், கடந்தாண்டு அக். 30 ஆம் தேதியில் பிரபல வணிக வளாகத்தில் அதிகளவிலான மது அருந்திவிட்டு, இரவு முழுவதும் சூதாட்டத்தில் விளையாடியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, போதையில் இருந்த ராமு, காலை 7 மணியளவில் வணிக வளாகத்திற்கு வெளியே திறந்த வெளியில் மலம் கழித்துள்ளார். பின்னர், அங்கிருந்த ஒரு கல் பெஞ்சில் படுத்து தூங்கியுமுள்ளார்.
இந்த சம்பவம் முழுவதும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்ததைக் கண்ட வணிக வளாகத்தின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர், அதனை சமூக ஊடகங்களில் பதிவிட்டதுடன், காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, ராமுவை காவல்துறையினர் தேடி வந்துள்ளனர்.
சமூக ஊடகங்களில் பரவிய விடியோ, இரண்டு நாள்களுக்குள் 1,500-க்கும் மேற்பட்ட லைக்குகள், 1,700 கருத்துகள், 4,700 பகிர்வுகளை அள்ளியது.
இந்த நிலையில், காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த ராமு, கடந்த ஜூன் மாதத்தில் மீண்டும் அதே சூதாட்ட விடுதிக்கு சென்றுள்ளார்.
ராமுவை அடையாளம் கண்ட விடுதி ஊழியர்கள், காவல்துறைக்கு தகவல் அளித்ததால், ராமு கைது செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, சிங்கப்பூரின் சுற்றுச்சூழல் பொது சுகாதார ஒழுங்குமுறைகளின்கீழ் பொது தூய்மை விதிமுறைகளை மீறியதற்காக, ராமுவுக்கு 400 சிங்கப்பூர் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது; இந்திய மதிப்பில் சுமார் ரூ. 25000 வரையில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதுபோல் இனி ஏதேனும் சம்பவங்களில் ஈடுபடக் கூடாது என்று நீதிமன்றம் அறிவுறுத்தியது.
இருப்பினும், சிங்கப்பூர் சட்டத்தின்கீழ், பொது இடத்தில் மலம் கழித்ததாக குற்றம் சாட்டப்பட்ட எவருக்கும் முதல் குற்றத்திற்கு 1,000 சிங்கப்பூர் டாலர் வரை அபராதம் விதிக்கப்படலாம்; அபராதத்தை செலுத்த தவறும்பட்சத்தில், நாளொன்றுக்கு 100 சிங்கப்பூர் டாலர் வீதம் கூடிக்கொண்டே போகும் என்றும் கூறுகின்றனர்.