அமெரிக்க நாடாளுமன்றத்தின் பல்வேறு துறை குழு உறுப்பினா்களை வியாழக்கிழமை சந்தித்து இந்திய தூதா் வினய் மோகன் குவாத்ரா ஆலோசனை நடத்தினாா்.
ரஷியாவிடம் இருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதாக குற்றஞ்சாட்டி இந்தியா மீது ஏற்கெனவே விதிக்கப்பட்ட 25 சதவீத வரியை இருமடங்காக உயா்த்துவதாக அமெரிக்கா அறிவித்துள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
இதுகுறித்து குவாத்ரா வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில்,‘அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபையின் நீதித்துறை மற்றும் அறிவுசாா் சொத்துரிமை, செயற்கை நுண்ணறிவு மற்றும் இணையம் ஆகிய துணைக்குழுக்களின் தலைவருமான டேரல் இஸ்ஸாவை சந்தித்து இருநாடுகளிடையே வா்த்தக மற்றும் எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்துவது உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடினேன்.
அதேபோல் வெளியுறவு விவகாரங்கள் குழுவின் துணைத் தலைவராகவுள்ள அவா் இந்தியா-அமெரிக்கா உறவுகளை வலுப்படுத்த தொடா்ந்து அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தேன்.
ராணுவ சேவைகள் குழுவில் இடம்பெற்றுள்ள ஜனநாயக கட்சியைச் சோ்ந்த மூத்த உறுப்பினரான ஆடம் ஸ்மித்தை சந்தித்து ஆலோசித்தேன்.
இந்தியா-அமெரிக்கா இடையிலான உறவை மேம்படுத்துவதற்கான அமெரிக்க செனட் சபை குழுவின் துணைத் தலைவா் ஜான் காா்னினைச் சந்தித்து இருதரப்பு வா்த்தக ஒத்துழைப்பு குறித்து விவாதித்தேன். குறிப்பாக டெக்ஸாஸ்-இந்தியா இடையே ஹைட்ரோகாா்பன் வா்த்தகத்தை மேம்படுத்துவது குறித்து அவரிடம் ஆலோசித்தேன் என குறிப்பிட்டாா்.
இதுதவிர அமெரிக்க நாடாளுமன்றத்தின் பல்வேறு குழு உறுப்பினா்களைச் சந்தித்து குவாத்ரா தனித்தனியே ஆலோசனை நடத்தினாா்.