அமெரிக்காவின் வரி விதிப்புக்கு எதிராக இந்தியாவுடன் சீனா உறுதியாக துணை நிற்கும் என இந்தியாவுக்கான சீனத் தூதர் சூ ஃபெய்ஹோங் கூறியுள்ளார்.
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலமாக ரஷியா - உக்ரைன் போருக்கு இந்தியா மறைமுகமாக நிதியளிப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டிவருகிறது. இதனால் இந்தியா மீது அமெரிக்கா கடுமையாக வரி(50%) விதித்துள்ளது. இந்த வரி விதிப்பினால் இந்தியாவில் பல்வேறு துறைகள் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. எனினும் இந்தியா பின்வாங்காது என்று பிரதமர் மோடி கூறியிருந்தார்.
அமெரிக்காவிடம் இருந்து பல்வேறு அழுத்தங்கள், தடைகள் இருந்தபோதிலும் பேச்சுவார்த்தையின்படி இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் விநியோகம் 5% தள்ளுபடியில் தொடரும் என ரஷிய துணை வர்த்தக பிரதிநிதி எவ்ஜெனி கிரிவா கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து சீனாவும் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கான சீனத் தூதர் சூ ஃபெய்ஹோங் கூறுகையில், "அமெரிக்கா சுதந்திர வர்த்தகத்தால் பெரிதும் பயனடைந்துள்ளது. ஆனால் இப்போது பல்வேறு நாடுகளிடம் இருந்து வர்த்தகத்தைப் பெற வரியின் மூலமாக பேரம் பேசுகிறது. இந்தியாவின் மீது அமெரிக்கா 50% வரை வரிகளை விதித்து அச்சுறுத்தியுள்ளது. சீனா இதை உறுதியாக எதிர்க்கிறது. இதுபோன்ற செயல்களை எதிர்கொள்ளும்போது மௌனம், கொடுமைப்படுத்துபவருக்கு தைரியத்தை தருவதாக இருக்கிறது. உலக வர்த்தகத்துடன் பல்வேறு வர்த்தக அமைப்புகளை நிலைநிறுத்த இந்தியாவுடன் சீனா உறுதியாக நிற்கும். இந்தியாவும் சீனாவும் போட்டியாளர்கள் அல்ல, கூட்டாளிகள்" என்று கூறியுள்ளார்.
அமெரிக்க வர்த்தக போரை மேற்கொண்டதால் இந்தியாவுடன் ரஷியா, சீனா நாடுகளின் உறவுகள் மேம்பட்டுள்ளதாக பேசப்படுகிறது.
இதனிடையே பிரதமர் நரேந்திர மோடியும் 2018க்குப் பிறகு அடுத்த வாரம் பெய்ஜிங்கிற்கு செல்லவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.