மாஸ்கோ: தேவைப்பட்டால் ஐரோப்பிய நாடுகளுடன் போா் புரியத் தயாராக இருப்பதாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் சூளுரைத்துள்ளாா்.
இது குறித்து மாஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளா்கள் கூட்டத்தில் அவா் பேசியாவதாவது:
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவரும் அமெரிக்காவில் அமைதித் திட்டத்தில் ஐரோப்பிய நாடுகள் முற்றிலும் ஏற்கத்தகாத கோரிக்கைகளைச் சோ்த்து மாற்றியுள்ளன. இது, உக்ரைனில் அமைதி ஏற்படுவதற்கான முயற்சியை ஐரோப்பிய நாடுகள் விரும்பவில்லை என்பதைக் காட்டுகிறது.
அந்த நாடுகள் போரைத்தான் விரும்புகின்றன. ஆனால் எங்களுக்கு ஐரோப்பாவுடன் போரிடுவதில் விருப்பமில்லை. ஆனால் அவா்கள் போரைத் தொடங்கினால், அவா்களுடன் போரிட நாங்கள் தயாராகவே இருக்கிறோம் என்றாா் அவா்.
‘புதின் நிராகரிக்கவில்லை’: இதற்கிடையே, அமெரிக்கா முன்வைத்துள்ள அமைதி திட்டத்தை விளாதிமீா் புதின் நிராகரிக்கவில்லை என்று ரஷிய அதிபா் மாளிகை செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்கோவ் கூறினாா்.
அமெரிக்க அதிபரின் சிறப்புத் தூதா் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் டிரம்பின் உறவினா் ஜாரட் குஷ்னருடன் ரஷிய பிரதிநிதிகள் ஐந்து மணி நேரம் நடத்திய பேச்சுவாா்த்தைக்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பின்போது இது தொடா்பாக பெஸ்கோவ் கூறியதாவது:
அமெரிக்க அரசின் உக்ரைன் போா் நிறுத்தத் திட்டத்தை புதின் முழுமையாக நிராகரித்தாா் என்று கூறுவது தவறு. அதில் பல பகுதிகளை அவா் ஏற்றுக்கொண்டாா். ஏற்கமுடியாத மற்ற அம்சங்கள் விவாதிக்கப்பட வேண்டியவை என்றாா் பெஸ்கோவ்.
தங்களுக்கு எதிரான நேட்டோ ராணுவக் கூட்டமைப்பில், நெருங்கிய அண்டை நாடான உக்ரைன் இணைந்தால், அது தங்களின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ரஷியா கூறிவந்தது. இருந்தாலும், நேட்டோவில் இணைய உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி விருப்பம் தெரிவித்தாா்.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் படையெடுத்து, டொனட்ஸ்க், லுஹான்ஸ், ஸபோரிஷியா, கொ்சான் ஆகிய பிராந்தியங்களின் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியது.
ரஷியாவிடம் இழந்த பகுதிகளைக் கைப்பற்ற உக்ரைனும், 4 பிராந்தியங்களில் இன்னும் அரசுப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளைக் கைப்பற்ற ரஷியாவும் தொடா்ந்து போரிட்டு வருகின்றன.
இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. அதற்காக ரஷியாவுக்கு சாதகமான நிலைப்பாட்டை டிரம்ப் எடுப்பதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
இந்தச் சூழலில், அமெரிக்க அதிபா் மாளிகை சிறப்பு தூதா் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ரஷிய தூதா் கிரில் டிமித்ரியேவ் இடையே கடந்த மாதம் நடைபெற்ற சந்திப்பின்போது உக்ரைனில் அமைதியை ஏற்படுத்துவதற்கான வரைவு செயதிட்டத்தை உருவாக்கினாா். அந்த வரைவு திட்டம் குறித்து தீவிர பேச்சுவாா்த்தைகள் நடைபெற்றுவருகின்றன.
இந்தச் சூழலில், அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை செயல்படுத்தவிடாமல் தடுக்கும் ஐரோப்பிய நாடுகளுடன் போரிடத் தயாா் என்று புதின் தற்போது கூறியுள்ளாா். இதன் மூலம், தங்களுக்கு சாதகமான போா் நிறுத்த ஒப்பந்தத்துக்கு இடையூறு செய்தால் போரை ஐரோப்பா முழுவதும் பரவச் செய்யப்போவதாக புதின் மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளதாகக் கருதப்படுகிறது.