1996 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியை வெற்றி பெறச் செய்த முன்னாள் கேப்டன் அர்ஜுன ரணதுங்கவை (62) கைது செய்ய அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம் கொழும்பு நீதிமன்றத்தில் தெரிவித்ததாவது: பெட்ரோலியத் துறை அமைச்சராக இருந்த காலத்தில், நீண்டகால எண்ணெய் கொள்முதல் ஒப்பந்தங்களை வழங்கும் முறையை மாற்றி, உடனடி கொள்முதல் முறையில் அதிக விலைக்கு எண்ணெய் வாங்கியதன் மூலம் அரசுக்கு அர்ஜுன ரணதுங்க இழப்பு ஏற்படுத்தினார்.
2017-இல் நடந்த 27 கொள்முதல்கள் மூலம் அரசுக்கு ரூ.80 கோடி இழப்பு ஏற்பட்டது. எனவே, இந்த வழக்கு தொடர்பாக அவரைக் கைது செய்ய முடிவு செய்துள்ளோம். அர்ஜுன ரணதுங்க வெளிநாட்டில் இருப்பதால், அவர் திரும்பியவுடன் கைது செய்யப்படுவார் என்று ஆணையம் நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இதற்கிடையே அர்ஜுன ரணதுங்கவின் மூத்த சகோதரரும், அப்போதைய இலங்கை பெட்ரோலியக் கழகத் தலைவருமான தம்மிக ரணதுங்க திங்கள்கிழமை கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
அர்ஜுன ரணதுங்க வுக்கு எதிரான வழக்கு அதிபர் அநுரகுமார திசாநாயக அரசின் தீவிர ஊழல் ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். ஏற்கெனவே, அர்ஜுன ரணதுங்கவின் மற்றொரு சகோதரரான சுற்றுலாத் துறை முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, காப்பீட்டு மோசடி வழக்கில் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார்.
அதற்கு முன்னர் 2022 ஜூன் மாதம் ஒரு தொழிலதிபரிடம் பணம் பறித்த குற்றச்சாட்டில் அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறுத்தி வைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இடது கை பேட்டராக விளையாடி, 1996 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இலங்கைக்கு முதல் உலகக் கோப்பையை அர்ஜுன ரணதுங்க வென்று கொடுத்தார். இது இலங்கை கிரிக்கெட்டின் மிகப்பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.