கனடா பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை! இனவெறித் தாக்குதல்?
கனடாவில் இந்திய மாணவர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து...
கனடா நாட்டில், டொராண்டோ பல்கலைக்கழகத்தின் அருகில் இந்திய மருத்துவர் மாணவர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்தியாவைச் சேர்ந்த ஷிவாங்க் அவஸ்தி எனும் 20 வயது இளைஞர், டொராண்டோ ஸ்கார்பரோ பல்கலைக்கழகத்தில் 3 ஆம் ஆண்டு மருத்துவப் படிப்பு பயின்று வந்தார்.
இந்த நிலையில், அவரது பல்கலைக்கழக வளாகத்தின் அருகில், கடந்த செவ்வாய்க்கிழமை (டிச. 23) ஷிவாங்க் அவஸ்தியை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துவிட்டு தப்பியோடியதாக, இந்தியத் தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, கனடா அதிகாரிகள் கூறுகையில், கடந்த டிச.23 மாலை 3.30 மணியளவில் ஹைலாண்ட் கிரீக் பகுதியில் உள்ள பழைய கிங்ஸ்டன் சாலையில் ஒருவர் படுகாயங்களுடன் மயங்கி கிடப்பதாகத் தகவல் கிடைத்ததாகவும், அதிகாரிகள் அங்குச் சென்றபோது துப்பாக்கியால் சுடப்பட்ட காயங்களுடன் அவஸ்தி இறந்தநிலையில் கிடந்ததாகவும் கூறியுள்ளனர்.
இந்தத் தாக்குதல் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்தியர்கள் மீதான இனவெறி காரணமாக இருக்கக் கூடும் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும், தப்பியோடிய கொலையாளி குறித்து எந்தவொரு தகவலையும் இதுவரை கனடா அதிகாரிகள் வெளியிடவில்லை.
முன்னதாக, டொராண்டோ நகரத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு இந்தியாவைச் சேர்ந்த ஹிமான்ஷி குர்ரானா என்ற 30 வயது பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: பாகிஸ்தானில் மதரஸா பள்ளி மீது ட்ரோன் தாக்குதல்! 9 குழந்தைகள் படுகாயம்!