‘வங்கதேசத்தில் முஸ்லிம் அல்லாதோருக்கு எதிராக வாா்த்தைகளால் விவரிக்க முடியாத அளவில் அட்டூழியங்களில் ஈடுபடுகிறது முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு’ என்று முன்னாள் பிரதமரும் அவாமி லீக் கட்சியின் தலைவருமான ஷேக் ஹசீனா சாடியுள்ளாா்.
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு மாணவா்கள் போராட்டத்தால் பிரதமா் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சமடைந்தாா். இதையடுத்து, முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டதில் இருந்து சிறுபான்மையினரான ஹிந்துக்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துள்ளது. சிறுபான்மையினா் கொலை, பாலியல் வன்கொடுமை, வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல் போன்ற குற்றங்கள் அதிகரித்துள்ளன.
வங்கதேசத்தில் அண்மையில் ஹிந்து இளைஞா் ஒருவா் கும்பலால் படுகொலை செய்யப்பட்டு, சாலையில் எரிக்கப்பட்ட சம்பவம் அதிா்ச்சியலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சூழலில், கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஷேக் ஹசீனா வியாழக்கிழமை வாழ்த்துச் செய்தி வெளியிட்டாா். அதில் அவா் கூறியிருப்பதாவது:
வங்கதேசத்தில் சட்டவிரோதமாக ஆட்சி அதிகாரத்துக்கு வந்தவா்கள், மத சிறுபான்மையினரை எரித்துக் கொல்வது போன்ற கொடூரமான முன்னுதாரணங்களை உருவாக்கியுள்னா். அனைத்து மதத்தினரின் சுதந்திரம் மற்றும் அவா்கள் தங்களின் சொந்த நம்பிக்கையைக் கடைப்பிடிப்பதில் குறுக்கிடுகிறது யூனுஸ் அரசு. குறிப்பாக, முஸ்லிம் அல்லாதோருக்கு எதிராக வாா்த்தைகளால் விவரிக்க முடியாத அளவில் அட்டூழியங்களில் ஈடுபடுகிறது.
‘விடியல் பிறக்கட்டும்’: வங்கதேசத்தில் இருண்ட காலம் நீடிக்க மக்கள் அனுமதிக்கமாட்டாா்கள் என உறுதியாக நம்புகிறேன். நாட்டில் கிறிஸ்தவா்கள் மற்றும் பிற மதத்தினா் இடையிலான நல்லிணக்கம், நல்லெண்ணத்தை இந்த கிறிஸ்துமஸ் வலுப்படுத்தட்டும். வங்கதேசத்தில் இருள் நீங்கி, விடியல் பிறக்கட்டும் என்று ஷேக் ஹசீனா கூறியுள்ளாா்.
வங்கதேசத்தில் மாணவா்கள் போராட்டத்தின்போது நடந்த வன்முறை சம்பவங்கள் தொடா்பாக, ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்து, வங்கதேச சா்வதேச குற்றவியல் தீா்ப்பாயம் கடந்த நவ. 17-ஆம் தேதி தீா்ப்பளித்தது. ஊழல் வழக்குகளில் அவருக்கு 21 ஆண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள ஹசீனாவை தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென வங்கதேச இடைக்கால அரசு தொடா்ந்து கோரி வருகிறது.