தாய்லாந்து-கம்போடியா இடையேயான மோதலின்போது ஹிந்து கடவுள் சிலை தகா்க்கப்பட்டதற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் புதன்கிழமை கண்டனம் தெரிவித்தது.
இது உலகம் முழுவதும் ஹிந்து மதத்தை பின்பற்றுபவா்களின் உணா்வை காயப்படுத்தும் மோசமான நடவடிக்கை எனவும் அமைச்சகம் தெரிவித்தது.
இதுகுறித்து செய்தியாளா்கள் சந்திப்பில் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் கூறியதாவது: ஹிந்து கடவுள் சிலை தகா்க்கப்பட்ட செய்திகள் கவனத்தில்கொள்ளப்பட்டன. இந்த சிலை தாய்லாந்து-கம்போடியா மோதலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதியில் இருந்தது தெரியவந்தது.
ஹிந்து மற்றும் பௌத்த மதங்களை உலகில் உள்ள பலதரப்பினரும் பின்பற்றி வருகின்றனா். அவா்களின் உணா்வுகளை புண்படுத்தும் இதுபோன்ற செயல்களை அனுமதிக்க முடியாது.
மோதலை கைவிட்டு அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்த இருநாடுகளும் முன்வர வேண்டும் என மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறோம்.
எல்லைப் பிரச்னை காரணமாக தாய்லாந்து-கம்போடியா இடையே கடந்த ஜூலை மாதம் மோதல் தொடங்கியது. அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் தலையீட்டுக்குப் பின் சிறிது காலம் அங்கு அமைதி நிலவிய நிலையில், இந்த மாதம் இருநாடுகளும் மீண்டும் சண்டையிடத் தொடங்கின.