முகப்பு
உலகம்

மர்மக் காய்ச்சல்: காங்கோவில் 50-க்கும் மேற்பட்டோர் பலி!

காங்கோவில் மர்மக் காய்ச்சலுக்கு 50-க்கும் மேற்பட்டோர் பலி.

Updated On : 25 பிப்ரவரி 2025, 1:06 pm IST
- கோப்புப் படம்
பகிர்:

மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோவின் வடமேற்கு பகுதியில் மர்மக் காய்ச்சல் ஏற்பட்டு 50-க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மர்மக் காய்ச்சல் பாதிப்பு கடந்த ஜனவரி 21 அன்று முதலில் பதிவானது. இதுவரை 419 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு 53 பேர் பலியானதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதில் பெரும்பாலானோர் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்ட 48 மணி நேரத்துக்குள் பலியானதாகவும் இது மிகவும் கவலையளிப்பதாகவும் அங்குள்ள மருத்துவர்கள் மற்றும் உலக சுகாதார அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

உலக சுகாதார அமைப்பின் ஆப்ரிக்க நிர்வாகம் தெரிவித்துள்ள தகவலின்படி, போலோகோ நகரில் மூன்று சிறுவர்கள் வவ்வாலை சாப்பிட்டு 48 மணி நேரத்தில் ரத்தப்போக்கு ஏற்பட்டு பலியானதாகவும், அதனைத் தொடர்ந்து இந்தக் காய்ச்சல் பாதிப்பு தொடர்வதாகவும் தெரிவித்தனர்.

காட்டு விலங்குகள் அதிகமாக உண்ணப்படும் இடங்களில் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு நோய்கள் வேகமாகப் பரவுவது நீண்ட காலமாக நடைபெற்று வருகின்றது. ஆப்ரிக்காவில் கடந்த பத்தாண்டுகளில் இவ்வாறு நோய்ப்பரவல் ஏற்படுவது 60 சதவீதம் அதிகரித்துள்ளதாக கடந்த 2022-ல் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்தது.

தற்போது பரவும் மர்மக் காய்ச்சல் கடந்த பிப். 9 அன்று மீண்டும் வேகமாகப் பரவத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, 13 பேரின் மாதிரிகள் காங்கோ தேசிய உயிரியல் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆய்வுக்கு அனுப்பப்பட்டன.

அனைத்து மாதிரிகளையும் சோதனை நடத்தியதில் எபோலா, மார்பர்க் போன்ற ரத்தக்கசிவு நோய்த் தாக்குதல்கள் இல்லை என்று தெரிய வந்துள்ளன. சில மாதிரிகளின் சோதனையில் மலேரியா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

காங்கோவில் கடந்தாண்டு மலேரியா போன்ற மர்மக் காய்ச்சல் ஏற்பட்டு 12-க்கும் மேற்பட்டோர் பலியானது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.