FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

லாஸ் ஏஞ்சலீஸ்: காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் முன்னேற்றம்! பலி 16-ஆக உயர்வு!

லாஸ் ஏஞ்சலீஸ் சுற்றுவட்டாரத்தில் கொளுந்துவிட்டு எறியும் காட்டுத்தீ...

12 ஜனவரி 2025, 5:42 pm IST
- AP
பகிர்:

அமெரிக்காவில் நிகழாண்டில் மிகப்பெரியதொரு பேரிடராக லாஸ் ஏஞ்சலீஸ் கவுண்ட்டியில் கொளுந்துவிட்டு எறியும் காட்டுத்தீ உருமாறியுள்ளது.

அங்கு சுமார் 20,000 ஏக்கர் பரப்பளவுக்கும் மேற்பட்ட பகுதிகளில் தீப்பற்றி எறிகிறது. தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் கடுமையாகப் போராடி வருகின்றனர். காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், அதனால் ஏற்பட்ட பாதிப்புகளால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11-இலிருந்து 16-ஆக் அதிகரித்துள்ளது.

லாச் ஏஞ்சலீஸில் ஈட்டன் பகுதிகளில் பற்றி எறியும் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டு 11 பேரும், பாலிசேட்ஸ் பகுதிகளில் காட்டுத்தீக்கு 5 பேரும் உயிரிழந்துள்ளனர்.

Advertisement

Advertisement

சனிக்கிழமை நிலவரப்படி, லாஸ் ஏஞ்சலீஸ் கவுண்டியில் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். காட்டுத்தீயின் தாக்கம் அதிகரித்து வருவதை கருத்திற்கொண்டு, அப்பகுதிகளிலிருந்து மேலும் 1.66 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வெளியேறவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தங்கள் இருப்பிடங்களிலிருந்து வெளியேறுவதா? வேண்டாமா?? என்ன செய்வதென அறியாமல் கலிஃபோர்னியா பல்கலைக்கழக மாணவர்கள் பரிதவித்து வருகின்றனர். அரசு தரப்பிலிருந்து வரும் அறிவுறுத்தல்களை எதிர்நோக்கி அவர்கள் காத்திருக்கின்றனர்.

லாஸ் ஏஞ்சலீஸ் கவுண்டியில் காட்டுத்தீயால் பன்னிரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. பொதுவெளியில் நன்கு அறியப்பட்ட மெல் கிப்சன், லெய்டன் மீஸ்டெர், ஆதம் ப்ராடி, பாரிஸ் ஹில்டன் உள்பட பிரபலங்கள் பலரது வீடுகள் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டு சேதமடைந்துள்ளன.

காட்டுத்தீயால் லாஸ் ஏஞ்சலீஸ் கவுண்டியில் சுமார் 150 பில்லியன் வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. காட்டுத்தீ எறியும் பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு கடுமையாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. ஊரடங்கு உத்தரவை மீறுவோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

- AP

காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டுள்ள இடங்கள்:

பாலிசேட்ஸ் : லாஸ் ஏஞ்சலீஸில் பாலிசேட்ஸ் வனப்பகுதிகளில் கடந்த செவ்வாய்க்கிழமை காட்டுத் தீப்பற்றி எரியத் தொடங்கி பிற பகுதிகளுக்கும் பரவியது. சுமார் 23,654 ஏக்கர் பரப்பளவுக்கும் மேற்பட்ட பகுதிகள் தீக்கிரையாகியுள்ளன. சனிக்கிழமை மாலை நிலவரப்படி, அங்கு கடும் போராட்டத்துக்கு பலனாய் 11 சதவிகிதப் பகுதிகளில் காட்டுத்தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

ஈட்டன் : லாஸ் ஏஞ்சலீஸின் வடக்குப் பகுதியான ஈட்டனில், அல்டாடெணா உள்பட சுமார் 14,000 ஏக்கர் பரப்பளவுக்கும் மேற்பட்ட பல பகுதிகளில் காட்டுத்தீ எரிகிறது. அங்கு காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் 15 சதவிகிதப் பகுதிகளில் காடுத்தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஹர்ஸ்ட் : சான் ஃபெர்ணாண்டொவின் வடக்குப் பகுதியான ஹர்ஸ்ட்டில் சுமார் 800 ஏக்கர் பரப்பளவு தீக்கிரையாகி உள்ளது. அங்கு காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் 76 சதவிகிதப் பகுதிகளில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

கென்னெத் : லாஸ் ஏஞ்சலீஸ் மற்றும் வெண்டூரா ஆகிய இரு கவுண்டிகளின் எல்லைப் பகுதியான கென்னெத்தில் 1,052 ஏக்கர் பரப்பளவுக்கும் மேற்பட்ட பகுதிகள் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டுள்ளன. அங்கு காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் 90 சதவிகிதப் பகுதிகளில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

அதேபோல, காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டுள்ள ஆர்ச்செர், சன்செட், லிடியா, வுட்லி, ஒலிவாஸ் ஆகிய பகுதிகளிலும் காட்டுத்தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதுடன் தீயணைக்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் காட்டுத்தீ விபத்து ஏற்பட இடியும் மின்னலுமே முதன்மைக் காரணமாக உள்ளது. இந்த நிலையில், லாஸ் ஏஞ்சலீஸில் மின்னல் தாக்கியதால் காட்டுத் தீப்பற்றவில்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர். காட்டுத்தீ பரவியதற்கான காரணம் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்னொருபுறம், கடந்த அக்டோபர் முதல் லாஸ் ஏஞ்சலீஸில் 4 மி.மீ. மழைப்பொழிவு மட்டுமே பதிவாகியிருப்பதால் ஏற்பட்டுள்ள வறண்ட வானிலையும், கடற்புறத்திலிருந்து வீசி வரும் பலத்த சூறைக்காற்று (‘சாண்டா அனா விண்ட்ஸ்’), காட்டுத் தீப்பற்ற காரணமாக அமைந்திருக்ககூடுமென்றும் சொல்லப்படுகிறது.

இப்பகுதிகளில் இன்னும் ஒருவாரத்துக்கு மழைக்கு வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்திருப்பது அப்பகுதி மக்களிடையே கலக்கமடையச் செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments