வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக், இன்ஸ்டாவில் இனி அரசியல் பதிவுகளுக்கு கட்டுப்பாடு!
அரசியல் சம்பந்தப்பட்ட விளம்பரங்கள் பதிவிட விரைவில் தடை...
அரசியல் சம்பந்தப்பட்ட விளம்பரங்களை மெட்டா நிறுவனத்தின் சமூக ஊடக தளங்களில் பதிவிட அந்நிறுவனம் தடை விதிக்கவுள்ளது.
அமெரிக்காவைs சேர்ந்த மெட்டா நிறுவனம் தங்கள் சமூக ஊடக தளங்களில் (வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக், இன்ஸ்டா, த்ரெட்ஸ்) அரசியல், தேர்தல், சமூக பிரச்சினைகள் தொடர்பான அனைத்து விளம்பரங்களையும் விரைவில் நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது. எனினும், இந்த நடவடிக்கை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் மட்டுமே நடைமுறைக்கு வரவுள்ளது.
டிக்டாக் செயலியில் பதிவிடப்பட்ட போலியான தகவல்களை அடங்கிய விடியோவால் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஓர் அங்கமான ரோமானியாவில் கடந்த டிசம்பரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது கவனிக்கத்தக்கது.
Advertisement
இந்தநிலையில், தேர்தல் நடைபெறும்போது தவறான தகவல்களை பரப்பப்படுவதை தடுக்கவும் வெளிநாட்டு சக்திகள் பல குறுக்கீடு செய்வதை தடுக்கும் நடவடிக்கையாக, ஐரோப்பிய ஒன்றியத்தால் சில கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில், அரசியல் தொடர்பான பதிவுகளுக்கு கட்டுப்பாடு விதித்து ஐரோப்பிய ஒன்றியத்தால் சட்டம் அமல்படுத்தப்படவுள்ளதால் இந்த நடவடிக்கையை எடுக்க மெட்டா தீர்மானித்துள்ளது.
எனினும், ஐரோப்பிய ஒன்றியத்தில் மெட்டா தளங்களை பயன்படுத்துவோர் அவற்றில் அரசியல் தொடர்பான கருத்துப் பதிவுகள், விவாதங்கள் நடத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பரில் கூகுள் நிறுவனம் எடுத்திருந்த இதே பாணியிலான நடவடிக்கையை இப்போது மெட்டாவும் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.