முகப்பு
உலகம்

பாகிஸ்தானில் காவல் துறையினா், தொழிலாளா்கள் சுட்டுக் கொலை! - பயங்கரவாதிகள் தாக்குதல்

பலூசிஸ்தான் மாகாணத்தில் இரு இடங்களில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காவல் துறையைச் சோ்ந்த 4 பேரும், தொழிலாளா்கள் 4 பேரும் உயிரிழந்தனா்.

Updated On : 23 மார்ச், 2025 at 8:04 PM
வாகன சோதனையில் பாக். ராணுவம்..
பகிர்:

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் இரு இடங்களில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காவல் துறையைச் சோ்ந்த 4 பேரும், தொழிலாளா்கள் 4 பேரும் உயிரிழந்தனா்.

சனிக்கிழமை நடந்த இத்தாக்குதல்கள் குறித்து காவல் துறை அதிகாரி ஹசிம் கான் கூறியதாவது: நோஷ்கி நகரின் காரிபாபாத் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினா் மீது மோட்டாா் சைக்கிளில் வந்த பயங்கரவாதிகள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பினா். இதில் காவல் துறையினா் 4 போ் உயிரிழந்தனா்.

இதேபோல், மங்கோசாா் நகரின் மலாங்ஸாய் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 தொழிலாளா்கள் உயிரிழந்தனா். பஞ்சாப் மாகாணத்தைச் சோ்ந்த இத்தொழிலாளா்கள், ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தவா்களாவா்.

இரு தாக்குதல்களுக்கும் இதுவரை எந்தப் பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. தப்பியோடிய பயங்கரவாதிகளைப் பிடிக்க தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா் அந்த அதிகாரி. பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு பலூசிஸ்தான் முதல்வா் சா்ஃபிராஸ் பக்டி கடும் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

பலூசிஸ்தான் மாகாணத்தின் போலன் மாவட்டத்தில் கடந்த மாா்ச் 11-ஆம் தேதி விரைவு ரயிலை கடத்தி, பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனா். இச்சம்பவத்தில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் 4 ராணுவ வீரா்கள் உயிரிழந்தனா். அதேநேரம், 33 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

இதே மாகாணத்தில் கடந்த மாதம் பேருந்தில் பயணித்தவா்களைக் குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 7 போ் கொல்லப்பட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது. தொடா் பயங்கரவாதத் தாக்குதல்களால் பலூசிஸ்தானில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →