கனடாவின் புதிய பிரதமராக பதவியேற்று இருக்கும் மார்க் கார்னி, முன்கூட்டியே பொதுத் தேர்தலை நடத்த உத்தரவிட்டுள்ளார்.
வருகின்ற அக்டோபர் மாதம் வரை பதவிக் காலம் இருக்கும் நிலையில், நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைத்து வருகின்ற ஏப்ரல் 28 ஆம் தேதி பொதுத் தேர்தல் நடத்த அழைப்பு விடுத்துள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளாக பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ மீது மக்களுக்கும், ஆளும் லிபரல் கட்சியினருக்கும் அதிருப்தி அதிகரித்த நிலையில், தனது பதவியை கடந்த மாதம் ராஜிநாமா செய்தார்.
இதனைத் தொடர்ந்து, புதிய பிரதமராகவும் லிபரல் கட்சித் தலைவராகவும் பொருளாதார நிபுணரான மாா்க் காா்னி தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து, கடந்த 14-ஆம் தேதி பிரதமராக பதவியேற்றுக் கொண்டார்.
பிரதமராகப் பதவியேற்றுப் பத்து நாள்களே ஆகும் நிலையில், நாடாளுமன்றத்தை கலைத்து முன்கூட்டியே தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக பேசிய அவர், ”டிரம்ப் நம்மை உடைக்க விரும்புகிறார். அது நடக்க நாங்கள் விடமாட்டோம். டிரம்பின் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கான தலைவரை மக்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
கனடாவில் உள்ள 343 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வருகின்ற ஏப்ரல் 28 ஆம் தேதி நடைபெறவுள்ளது. 172 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மை பெறும் கட்சி ஆட்சி அமைக்கும்.
தற்போது லிபரல் கட்சி மற்றும் கன்சர்வேடிவ் கனடா கட்சிகளிடையே இருமுனைப் போட்டி நிலவுகிறது. ஜஸ்டின் ட்ரூடோவுக்கான எதிர்ப்பு காரணமாக கன்சர்வேடிவ் கட்சிக்கு ஆதரவு அதிகரித்திருந்தது.
ஆனால், அவர் பதவி விலகி மார்க் கார்னி பொறுப்பேற்ற பிறகு மீண்டும் ஆளும் லிபரல் கட்சிக்கான ஆதரவு அதிகரித்துள்ளது. டிரம்பின் வரி விதிப்பு, அச்சுறுத்தல் உள்ளிட்டவை பிரசாரத்தில் முன்னிலைப்படுத்த இரு கட்சிகளும் திட்டமிட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.