மியான்மர் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 1,644 ஆக உயர்வு!
மியான்மர் நிலநடுக்கத்தால் பலியானோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
மியான்மரில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக பலியானோர் எண்ணிக்கை 1,644 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
மியான்மர், தாய்லாந்து நாடுகளில் நேற்று (28.03.25) பிற்பகல் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் இரு நாடுகளிலும் பாதிப்புகள் மிகவும் மோசமடைந்துள்ளன.
புள்ளிவிவரங்களின் படி, சகாய்ங் நகரின் வடமேற்கே 16 கி.மீ, தொலைவில் 11.50 மணியளவில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.7 அலகுகளாகப் பதிவானது. தொடர்ந்து, இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டு ரிக்டரில் 6.4 புள்ளியாகப் பதிவானது.
Advertisement
Advertisement
மியான்மர் நாட்டில் ஏற்பட்ட மிக மோசமான பேரழிவாக இது பார்க்கப்படுகிறது. மின்கம்பங்கள் சாய்ந்து மின்வசதி தடைபட்ட பல இடங்களில் மீட்புப் பணியைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த இரு நிலநடுக்கங்களால் மியான்மரின் அண்டை நாடான தாய்லாந்தின் தலைநகர் பாங்காக் மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளிலும் பல அடுக்குமாடி கட்டடங்கள் சரிந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
மியான்மரில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 1,644 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 3,408் காயமடைந்ததாகவும் 139 பேர் காணாமல் போனதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல, தாய்லாந்தில் இதுவரை 10 பேர் பலியானதாகவும் 26 பேர் காயமடைந்ததாகவும் 40-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிலநடுக்கத்தால் கட்டடங்கள் சரிந்ததால் அவற்றின் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இரு நாடுகளிலும் பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.