முகப்பு
உலகம்

தாய்லாந்தில் அரிய வகை குரங்குகளைக் கடத்தியவர் கைது!

தாய்லாந்தில் அரிய வகை குரங்கு குட்டிகளைக் கடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளதைப் பற்றி...

Updated On : 15 மே 2025, 4:46 pm IST
கடத்தப்பட்ட குரங்கு
பகிர்:

தாய்லாந்து நாட்டில் அரிய வகை குரங்கு குட்டிகளைக் கடத்திய நபரை அந்நாட்டு காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

சர்வதேச வனவிலங்கு கடத்தல் குழு தொடர்பான வழக்கில், அமெரிக்க மீன் வளம் மற்றும் வனவிலங்கு துறை அதிகாரிகள் மற்றும் ஐ.நா.வின் போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு ஆகியோருடன் இணைந்து தாய்லாந்து காவல் துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர்.

அதன் அடிப்படையில், அந்நாட்டு தலைநகர் பாங்காக்கிலுள்ள பெட்ரோல் நிலையத்தில் நேற்று (மே 14) மாலை, வனவிலங்கை வாடிக்கையாளரிடம் ஒப்படைக்க வந்த சுமார் 47 வயது மதிக்கத்தக்க நபரைச் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.

Advertisement

அப்போது, அவர் ஓராண்டு மற்றும் 1 மாதம் வயதுடைய 2 அரிய வகை ஒராங்குட்டான் இன குரங்கு குட்டிகளை பிளாஸ்டிக் கூடையில், குழந்தைகள் அணியும் டையப்பரை அணிவித்து கடத்தி வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த வகை குரங்குகள் போர்னியோ மற்றும் சுமத்ரா தீவுகளைப் பூர்வீகமாகக் கொண்டவை எனவும் அவை அழிவின் விளிம்பில் உள்ளதால், சர்வதேச அளவில் பாதுகாக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வகை குரங்குகள் அந்நாட்டில் சுமார் ரூ. 7.6 லட்சம் வரை விற்பனை செய்யப்படுவதாக தாய்லாந்து அதிகாரிகள் கூறுகின்றனர். மீட்கப்பட்ட அந்த குரங்கு குட்டிகள் தேசியப் பூங்கா, வனவிலங்கு மற்றும் தாவர பாதுகாப்புத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இத்துடன், கைது செய்யப்பட்ட அந்த நபர் குரங்குகளை வாடிக்கையாளரிடம் ஒப்படைக்க பணியமர்த்தப்பட்டவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

இருப்பினும், அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவருக்கு சுமார் 4 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க: நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் பழங்குடியின எம்பிக்கள் 3 பேர் இடைநீக்கம்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.