நியூ யார்க் மேயர் தேர்தலில் ஸோரான் மம்தானியின் வெற்றியால், அமெரிக்கா தனது இறையாண்மையை சிறிது இழந்துவிட்டதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயாா்க், சின்சினாட்டி நகரங்கள், விா்ஜீனியா, நியூஜொ்சி மாகாணங்களில் முக்கியப் பதவிகளுக்கு நடத்தப்பட்ட தோ்தல்களில் எதிா்க்கட்சியான ஜனநாயக கட்சி வேட்பாளா்கள் வெற்றி பெற்றனா். இது, அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கு அரசியல் ரீதியில் ஏற்பட்டுள்ள முதல் மிகப் பெரிய பின்னடைவாகப் பாா்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் நியூயாா்க் நகர மேயா் தோ்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான இந்திய வம்சாவளி இஸ்லாமியா் ஸோரான் மம்தானி (34) வெற்றி பெற்றாா்.
இந்த நிலையில், ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட டிரம்ப், நியூயார்க் மேயர் தேர்தலில் வெற்றிபெற்ற மம்தானி குறித்து பேசினார்.
அவர் பேசியதாவது:
”நவம்பர் 5, 2024 அன்று, அமெரிக்க மக்கள் எங்கள் அரசாங்கத்தை அமைத்தனர். நாங்கள் அமெரிக்காவின் இறையாண்மையை மீட்டெடுத்தோம். நேற்றிரவு நியூயார்க்கில் நாம் இறையாண்மையை சிறிது இழந்துள்ளோம். ஆனால், அதை சரிசெய்து விடலாம்.
ஜனநாயகக் கட்சியினர் அமெரிக்காவுக்கு என்ன செய்ய விரும்புகிறார்கள் என்பதை நீங்கள் பார்க்க வேண்டுமானால், நியூயார்க் தேர்தலின் முடிவுகளைப் பாருங்கள். நாட்டின் மிகப்பெரிய நகரத்தின் மேயராக ஒரு கம்யூனிஸ்ட்டை நிறுத்தி வெற்றி பெற வைத்துள்ளனர்.
நான் பல ஆண்டுகளாக எச்சரித்ததை போலவே, எங்கள் எதிரிகள் அமெரிக்காவை ஒரு கம்யூனிஸ்ட் கியூபாவாகவும், சோசலிச வெனிசுலாவாகவும் மாற்றுவதில் உறுதியாக உள்ளனர். அந்த நாடுகளுக்கு என்ன ஆனது என்பதை நீங்கள் காண்கிறீர்கள்.” எனத் தெரிவித்தார்.
மேலும், மம்தானியின் வெற்றி உரை குறித்து கருத்து தெரிவித்த டிரம்ப், “அவரின் பேச்சு மிகவும் கோபமாக இருந்தது. குறிப்பாக என்மீதான கோபம் வெளிப்பட்டது. அவர் என்னிடம் கனிவுடன் நடந்துகொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில், அவரின் பல விஷயங்களை அங்கீகரிக்க வேண்டியவன் நான்.” எனக் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.