முகப்பு
உலகம்

இலங்கையில் மழை, நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு!

இலங்கையில் கடந்த சில நாள்களாக பெய்துவரும் பலத்த மழை, நிலச்சரிவில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர்.

Updated On : 28 நவம்பர் 2025, 2:37 am IST
பகிர்:

இலங்கையில் கடந்த சில நாள்களாக பெய்துவரும் பலத்த மழை, நிலச்சரிவில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர். 6,000-க்கும் மேற்பட்டோர் வீடு, உடைமைகளை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை கடல் பகுதியில் உருவாகியுள்ள "டித்வா' புயலால் வடக்கு, வடக்கு மத்திய மாகாணங்கள் மற்றும் வடமேற்கு மாகாணங்களில் மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழைக்கு வாய்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இலங்கையில் கடந்த 10 நாள்களுக்கு மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மத்திய மலை மாவட்டங்களில் மட்டும் நிலச்சரிவுகளால் 18 பேர் உயிரிழந்தனர்.

Advertisement

Advertisement

நிலச்சரிவில் சிக்கி பலர் காணாமல் போய்விட்டனர் என்று அந்நாட்டின் பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது. பதுளை மாவட்டத்தில் மழை, நிலச்சரிவால் அதிகபட்சமாக 23 பேர் உயிரிழந்துவிட்டனர்.

மொத்தமுள்ள 25 நிர்வாக மாவட்டங்களில் 17 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மழை பாதிப்பு தொடர்பாக அதிபர் அநுரகுமார திசாநாயக அதிகாரிகளுடன் தொடர் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறார். அடுத்த சில நாள்களுக்கு மழை தொடரும் என்று முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. மலைப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மழை காரணமாக இலங்கை நாடாளுமன்ற நடவடிக்கைகளும் வியாழக்கிழமை (நவ. 27) நடைபெறவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.