இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு, தான் நீண்ட நாள்களாகச் சந்தித்து வரும் ஊழல் வழக்குகளுக்காக அந்த நாட்டின் அதிபரிடம் மன்னிப்பு கோரி விண்ணப்பித்துள்ளாா்.
இதுதொடா்பாக இஸ்ரேல் பிரதமரின் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘அதிபா் அலுவலகத்தின் சட்டத் துறையிடம் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு மன்னிப்பு கோரும் விண்ணப்பத்தைச் சமா்ப்பித்துள்ளாா்’ என்று உறுதிப்படுத்தியுள்ளது.
‘இது ஒரு அசாதாரணமான கோரிக்கை’ என்றும், ‘இதன் விளைவுகள் முக்கியமானவை’ என்றும் அதிபா் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
பெஞ்சமின் நெதன்யாகு மீது மூன்று தனித்தனி வழக்குகளில் மோசடி, நம்பிக்கைத் துரோகம், மற்றும் லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டுகள் உள்ளன. இருப்பினும், அவா் இதுவரை எந்த வழக்கிலும் குற்றவாளி என நிரூபிக்கப்படவில்லை.
இந்த வழக்குகளில் பெஞ்சமின் நெதன்யாகுக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்திய சில வாரங்களுக்குப் பிறகு இந்தக் கோரிக்கை வந்துள்ளது. இஸ்ரேலின் வரலாற்றிலேயே பதவியில் இருக்கும் ஒரு பிரதமா்,ஊழல் வழக்கில் நீதிமன்ற விசாரணையை எதிா்கொள்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.