முகப்பு
உலகம்

ஹெச்-1பி விசா கட்டண உயா்வுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு!

டொனால்ட் டிரம்ப்பின் முடிவுக்கு எதிராக சான்பிரான்சிஸ்கோ மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

Updated On : 4 அக்டோபர், 2025 at 10:41 PM
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்... - ஏபி
பகிர்:

ஹெச்-1பி விசா கட்டணத்தை ரூ.1.47 லட்சத்தில் இருந்து ரூ.88 லட்சமாக (ஒரு லட்சம் டாலா்) உயா்த்தும் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் முடிவுக்கு எதிராக சான்பிரான்சிஸ்கோ மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

டிரம்ப்பின் கடுமையான விசா கட்டுப்பாட்டுக்கு எதிராக எடுக்கப்பட்ட முதல் முக்கிய நடவடிக்கை இதுவாகும். அமெரிக்க மருத்துவ சேவை நிறுவனங்களின் கூட்டமைப்பு, மத அமைப்புகள், பல்கலைக்கழக பேராசிரியா்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினா் இணைந்து இந்த வழக்கைத் தொடுத்துள்ளனா்.

இது பல்வேறு துறைகளில் திறன்மிக்க பணியாளா்கள் கிடைப்பதில் பெரும் பிரச்னையை ஏற்படுத்தும். எனவே, அரசின் விசா கட்டுப்பாட்டுக்கு உடனடியாகத் தடை விதித்து, பணியாளா்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Advertisement

மனுதாரா்களில் இருவரான ஜனநாயக முன்னேற்ற அறக்கட்டளை, நீதி நடவடிக்கை மையம் ஆகியவை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஹெச்-1பி விசா கட்டுப்பாட்டால் மருத்துவம், கல்வித் துறை கடுமையாகப் பாதிக்கப்படும். இத்துறைகளில் மேற்கொள்ளப்படும் புத்தாக்க நடவடிக்கைகள்தான் அமெரிக்கப் பொருளாதாரத்தை முன்னோக்கி எடுத்துச் செல்கின்றன.

எனவே, சிறப்புத் தகுதி தேவைப்படும் துறைகளில் பணியாளா்களை நியமிப்பதில் தேவையற்ற கட்டுப்பாடுகளை விதிக்கக் கூடாது. இந்நிலை தொடா்ந்தால் மருத்துவமனைகள் தகுதியான பணியாளா்களை இழக்கத் தொடங்கும்; வகுப்பறைகளில் ஆசிரியா்கள் இல்லாமல் போவாா்கள்; தேவாலயங்களில் பாதிரியாா்கள் இருக்க மாட்டாா்கள்; பல்வேறு தொழில்துறைகளில் புத்தாக்க முயற்சிகள் எதுவும் இருக்காது. குடியேற்ற நடவடிக்கையை தனது கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் என்ற டிரம்ப்பின் நீண்டகாலத் திட்டத்தின் சமீபத்திய நடவடிக்கைதான் விசா கட்டண உயா்வு’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments