இலங்கையுடன் முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த விருப்பம்! -சீன அதிபர்
சீன அதிபருடன் இலங்கை பிரதமர் சந்திப்பு!
சீன அதிபருடன் இலங்கை பிரதமர் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். மகளிரைப் பற்றிய உலகத் தலைவர்கள் சர்வதேச ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள சீன தலைநகர் பீஜிங்குக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை(அக். 12) சென்றடைந்த இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியா சீன அதிபர் ஜி ஜின்பிங்கை இன்று(அக். 14) சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
அப்போது இரு நாட்டுத் தலைவர்களும் பாதுகாப்பு விவகாரம், சட்ட அமலாக்கம் உள்பட பல்வேறு முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை முன்னிலைப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையுடன் துறைமுக பொருளாதாரம், நவீன விவசாயம் மின்னணு பொருளாதாரம், பசுமை பொருளாதாரம், சுற்றுலா ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்திடவும் உயர்தர ஒத்துழைப்பு நல்கவும் சீனா விருப்பப்படுவதாக ஜி ஜின்பிங் அமரசூரியவிடம் தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
சீனாவுடனான ஒத்துழைப்புக்கு இலங்கை தயாராக இருப்பதாகவும், தங்கள் நாட்டின் வளர்ச்சியில் புத்துணர்ச்சி ஏற்படுவதற்காக சீனாவுடனான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை எதிர்நோக்கியிருப்பதாகவும் அமரசூரியா தெரிவித்திருக்கிறார்.
முன்னதாக, நிகழாண்டின் தொடக்கத்தில், இலங்கை அதிபர் அநுர குமார திசநாயகே சீனாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்ததும், அந்தப் பயணத்தின் பயனாக இலங்கையில் 3.7 பில்லியன் டாலர் முதலீடு செய்ய சீனா முன்வந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.