அமெரிக்க அதிபர் டிரம்ப் தென்கொரியா செல்லவிருப்பதாகவும், அங்கு அவர் சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்திக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அடுத்த மாதம் தென் கொரியாவில் நடைபெறும் ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் கலந்துரையாடலாம் என்ற தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
ரஷியாவிடமிருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்குவதைக் கண்டித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவின் மீது 50 சதவிகித வரியை விதித்தார்.
இது இந்திய சந்தைகளில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தாலும், இந்தியா தொடர்ந்து ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்துவருகிறது.
இந்த நிலையில், அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஷாங்காய் உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட இந்திய பிரதமர் மோடி, சீன பிரதமர் ஷி ஜின்பிங், ரஷிய அதிபர் புதின் இருவரையும் சந்தித்தார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு எதிராக பிரிக்ஸ் நாடுகளைச் சேர்ந்த முன்னணி நாடுகளாக இந்தியா, சீனா, ரஷியா உள்ளிட்ட மூன்று நாடுகளும் ஒன்றாக இணைந்திருப்பது உலக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதனை டிரம்ப் கடுமையாக விமர்சித்திருந்தார்.
இதனிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது ஆலோசகர்கள் தென்னாப்பிரிக்காவின் கியோங்ஜுவில் நடைபெறும் ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள அமைதியாக தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், “சீன அதிபர் ஷி ஜின்பிங், கடந்த மாதம் தொலைபேசி அழைப்பில் பேசுகையில், டிரம்ப் மற்றும் அவரது மனைவியை சீனாவுக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்ததாகவும், அதற்கு டிரம்ப் ஒப்புக்கொண்டுள்ளதாகவும், ஆனால் சந்திப்பிற்கான தேதி குறிப்பிடப்படவில்லை” என தெரிவிக்கின்றன.
ஒருவேளை இருவரும் சந்திக்கும் பட்சத்தில் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அணு சக்தி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.