சார்லி கிர்க்கின் கொலையை முன்பே கணித்த பாதுகாவலர்! முன்னெச்சரிக்கை உதாசீனம்!
டிரம்ப் ஆதரவாளர் சார்லி கிர்க்கின் கொலை அச்சுறுத்தல் 100% என்று முன்னரே பாதுகாப்பு நிபுணர் எச்சரிக்கை
அமெரிக்காவில் திருப்புமுனை அமைப்பின் நிறுவனர் சார்லி கிர்க்கின் கொலை அச்சுறுத்தல் குறித்து முன்னரே எச்சரிக்கை விடுத்ததாக பாதுகாப்பு நிபுணர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வலதுசாரி ஆர்வலரும், அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளருமான சார்லி கிர்க், யூட்டா பல்கலைக்கழகத்தில் செப்.10 ஆம் தேதி நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருந்தபோதே சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் டைலர் ராபின்சன் (22) என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆனால், அவர் கொலை செய்யப்படுவதற்கு முன்பே, அவருக்கு கொலை அச்சுறுத்தல் இருப்பதாக முன்னெச்சரிக்கை விடப்பட்டது.
Advertisement
Advertisement
முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், வரவிருக்கும் நிகழ்ச்சிகளில் சார்லி கிர்க் கொல்லப்படுவதற்கான வாய்ப்புகள் 100 சதவிகிதம் என்று பாதுகாப்பு நிறுவன உரிமையாளர் கிரிஸ் ஹெர்சாக் மார்ச் மாதத்திலேயே எச்சரிக்கை விடுத்தார்.
இருப்பினும், கிரிஸின் எச்சரிக்கையை உதாசீனப்படுத்திவந்த சார்லி, தொடர்ந்து முன்னெச்சரிக்கை இல்லாத நிகழ்ச்சிகளில் பேசி வந்தார். இந்த நிலையில்தான், செப். 10 ஆம் தேதியில் யூட்டா பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
சார்லி கிர்க்கின் கொலை சம்பவம் குறித்து கிரிஸ் கூறுகையில், சார்லிக்கு எச்சரிக்கை விடுத்ததில் இருந்து அவர் என்னிடம் வரவில்லை. ஆனால், அவரது கொலை குறித்த எனது கணிப்பு நடந்தேறி விட்டது.
வரவிருக்கும் ஏதேனும் நிகழ்ச்சி ஒன்றில் அவர் சுட்டுக் கொல்லப்படுவதற்கான ஆபத்து இருப்பதாக எனது குழுவினர் முன்பே உணர்ந்திருந்தனர்.
சார்லியை பாதுகாக்க குண்டு துளைக்காத கண்ணாடி கவசங்களையும், 700 மீ சுற்றளவில் இருப்போரையும் கண்டறியும் மெட்டல் டிடெக்டர்களையும் பயன்படுத்துமாறு அறிவுறுத்தினேன். எவரேனும் சார்லியின் தலையில் சுடுவர் என்று எச்சரித்தேன் என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க: சார்லி கிர்க்கை கொன்ற ராபின்சன் தன்பாலின ஈர்ப்பாளரா? யார் அந்த அறை நண்பர்?
Charlie Kirk was warned he would be 100% killed.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.