தேனி டூ வாஷிங்டன்! அமெரிக்க தலைநகரின் மேயர் போட்டியில் தமிழ்ப் பெண்!
அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டிசியில் மேயர் தேர்தலில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ரினி சம்பத் போட்டி
அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டிசியில் மேயர் தேர்தலில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ரினி சம்பத் போட்டியிடுகிறார்.
அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டன் டிசியில் விரைவில் மேயர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், வாஷிங்டன் டிசி மேயர் தேர்தலில் போட்டியிடும் முதல் தெற்காசிய பெண் என்ற பெருமையை தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ரினி சம்பத் பெற்றுள்ளார்.
தமிழகத்தின் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ரினி சம்பத் (31), தனது 7-ஆவது வயதில் அமெரிக்காவில் குடிபெயர்ந்தார். மேலும், கடந்த 10 ஆண்டுகளாக தலைநகர் வாஷிங்டன் டிசி-யில்தான் ரினி சம்பத் வசித்து வருகிறார்.
Advertisement
மேலும், வாஷிங்டன் டிசி-யில் மேயர் தேர்தலில் போட்டியிடுவதற்காக 4,500 வாக்காளர்களின் கையெழுத்துகளைப் பெற்று, தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதியைப் பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி, இவர் பெற்றுள்ள கையெழுத்துகளின் எண்ணிக்கை, தேவைப்படும் எண்ணிக்கையைவிட இருமடங்குக்கும் அதிகமாகும்.
இதுகுறித்து, ரினி சம்பத் பேசுகையில், அமெரிக்காவில் கனவைத் தேடிவந்த நான், இப்போது வாஷிங்டன் டிசி மக்களின் தேவைகளுக்காகப் போட்டியிடுவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
மேலும், அமெரிக்காவின் பொருளாதாரத்தில் தெற்காசிய சமூகம் முக்கிய பங்களித்தாலும், அமெரிக்க அரசாங்கத்தில் தெற்காசிய சமூகத்தின் பிரதிநிதித்துவம் குறைவாகவே உள்ளது. இப்போது, மேயர் தேர்தலில் நான் போட்டியிடுவது, மற்றவர்களுக்கும் ஓர் உந்துதலாக இருக்கும் என்று தெரிவித்தார்.
மேயர் தேர்தலில் போட்டியிடும் ரினி சம்பத், நகரின் அடிப்படைச் சேவைகளுக்கே முன்னுரிமை அளிக்கிறார். சீரான சாலைகள், கழிவுநீர்க் கசிவைத் தடுத்தல், குடிநீர்க் குழாய்கள், வாழ்க்கைச் செலவைக் குறைத்தல் உள்ளிட்டவையே இவரின் முக்கிய வாக்குறுதிகளாக உள்ளன.
வாஷிங்டன் டிசி-யில் வருகிற ஜூன் 16 ஆம் தேதியில் முதன்மைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றால், நவம்பர் மாதத்தில் நடைபெறும் மேயர் தேர்தலில் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம்.