வளைகுடாவில் பிரிட்டன் பிரதமர்! ஹோர்முஸ் நீரிணையில் தடையற்ற போக்குவரத்து குறித்து ஆலோசனை
வளைகுடாவில் பிரிட்டன் பிரதமர் பயணம் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும்?
லண்டன் : பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மர் வளைகுடா பிராந்தியத்துக்கு புதன்கிழமை(ஏப். 8) புறப்பட்டார். அவரது 3 நாள்கள் பயணத்தில் முக்கியமாக தோழமை நாடுகளுடன் ஹோர்முஸ் நீரிணை நிரந்தரமாகத் திறப்பு குறித்து ஆலோசனை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் ஒட்டுமொத்தமாக அழியும் என்று செவ்வாய்க்கிழமை சூளுரைத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தமது நிலைப்பாட்டை அதன்பின் மாற்றிக்கொண்டதன் எதிரொலியாக அமெரிக்கா - ஈரான் இடையே அடுத்த 2 வாரங்கள் போர்நிறுத்தம் நீட்டிக்கப்படுகிறதென அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், பிரிட்டன் பிரதமரின் வளைகுடா பயணம் முக்கிய திருப்புமுனையாக அமையும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இது குறித்து, ஸ்டார்மர் தெரிவித்திருப்பதாவது : “இரவோடு இரவாக எட்டப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை நான் வரவேற்கிறேன். இதன்மூலம், அப்பிராந்தியத்துக்கும் உலகுக்கும் நிம்மதிப் பெருமூச்சுவிடும் ஒரு தருணம் கிடைக்கும். எங்களது கூட்டாளிகளுடன் கைகோத்து, இப்போது எட்டப்பட்ட போர்நிறுத்தத்தை நிலைக்கச்செய்ய முடிந்தளவு எல்லா முயற்சிகளையும் நாம் கட்டாயம் எடுத்தாக வேண்டும். அந்த ஒப்பந்தமானது நீடித்திருக்கக்கூடிய ஒப்பந்தமாகவும் மாற்றப்பட வேண்டும். ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்பட தேவையான ஒப்பந்தமாகவும் அது மாற வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Advertisement
பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடாவுக்கு இடையிலான ஹோா்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளது. வளைகுடா நாடுகளில் இருந்து எரிசக்தி ஏற்றுமதிக்கு முக்கிய வழித்தடமான ஹோா்முஸ் நீரிணைப் பகுதியில் ஏறத்தாழ 500 கப்பல்கள் சிக்கித் தவிக்கின்றன. அவற்றுள் கச்சா எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுடன் (எல்பிஜி) இந்தியாவுக்கு வர வேண்டிய பல சரக்கு கப்பல்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நீரிணையைக் கடந்து செல்ல இந்தியா உள்ளிட்ட சில நட்பு நாடுகளின் கப்பல்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என்று ஈரான் தளர்வு அளித்துள்ளது. ஆயினும், தங்கள் நாட்டு அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் ஈரான் வலியுறுத்தியுள்ளது.
கடும் நெருக்கடிக்குத் தீர்வு காணும் முயற்சியாக, ஹோர்முஸ் நீரிணை வழித்தடத்தில் கப்பல் போக்குவரத்து பாதுகாப்பை உறுதிசெய்து அவ்வழித்தடம் மீண்டும் இயல்புநிலைக்குத் திரும்ப ஒருங்கிணைந்து செயல்பட பல நாடுகளையும் ஒருங்கிணைத்து பிரிட்டன் தொடர் முயற்சியெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.