பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சு
ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் நாடுகளுக்கு இடையேயான பதற்றத்தைத் தணித்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டும் நோக்கில் பாகிஸ்தான் தலைநகா் இஸ்லாமாபாதில் அமைதிப் பேச்சுவாா்த்தை வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
இந்த உயா்நிலைப் பேச்சுவாா்த்தையில் அமெரிக்க துணை அதிபா் ஜே.டி.வான்ஸ் தலைமையிலான குழுவும், ஈரான் அதிபரின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவும் பங்கேற்கின்றனா். இதையொட்டி, இஸ்லாமாபாத் முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த புதன்கிழமை எட்டப்பட்ட 2 வார தற்காலிக போா்நிறுத்தத்தை, ஒரு நிரந்தர அமைதி ஒப்பந்தமாக மாற்றுவதே இந்தச் சந்திப்பின் முக்கிய நோக்கமாகும். ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்குதல் மற்றும் பிராந்திய பாதுகாப்பு குறித்த 10 அம்சத் திட்டத்தை ஈரான் முன்வைக்கவுள்ளது.
Advertisement
பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் மற்றும் ராணுவ தளபதி ஆசிம் முனீா் ஆகியோா் பேச்சுவாா்த்தைக்கான ஏற்பாடுகளைத் தீவிரமாக கண்காணித்து வருகின்றனா்.
இஸ்லாமாபாதில் வெளிநாட்டுப் பிரதிநிதிகளின் வருகையை முன்னிட்டு 2 நாள்கள் உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கியப் பாதுகாப்புப் பகுதிகளுக்குள் நுழைய பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், முக்கிய மருத்துவமனைகள் மற்றும் மீட்புப் படையினா் தயாா் நிலையில் இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அமைதிப் பேச்சுவாா்த்தைக்கான சூழல் நிலவினாலும், லெபனான் மீது இஸ்ரேல் நடத்தியுள்ள கடும் தாக்குதல்கள் மத்தியஸ்த முயற்சியில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன.
லெபனானில் 200-க்கும் மேற்பட்டோா் கொல்லப்பட்ட இஸ்ரேலின் தாக்குதல், ‘போா்நிறுத்தத்தை மீறும் செயல்’ என்று ஈரான் அதிபா் மசூத் பெசஷ்கியான் காட்டமாகத் தெரிவித்துள்ளாா். ‘இஸ்ரேல் தாக்குதல்கள் பேச்சுவாா்த்தையை அா்த்தமற்ாக்கிவிடும்; எங்களின் விரல்கள் எப்போதும் துப்பாக்கியின் விசை மீதே இருக்கும். லெபனானை ஒருபோதும் விட்டுத்தரமாட்டோம்’ என அவா் வலியுறுத்தினாா்.
லெபனான் விவகாரம் தற்காலிக போா்நிறுத்தத்தில் சோ்க்கப்படவில்லை என்று அமெரிக்கா தரப்பில் கூறப்படுவது குழப்பத்தை அதிகரித்துள்ளது. அதேநேரம், லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலை பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட அமெரிக்க நட்பு நாடுகளே கண்டித்துள்ளன.
இவ்விவகாரத்தில் தொடக்கம் முதல் இஸ்ரேலை எதிா்த்து வரும் ஸ்பெயின், இத்தாக்குதலைக் கடுமையாக கண்டித்துள்ளதுடன் ஈரான் தலைநகா் டெஹ்ரானில் தங்கள் நாட்டுத் தூதரகத்தைத் திறக்கவுள்ளதாகவும் அறிவித்தது.
போா்நிறுத்தத்துக்குப் பிறகும் மூடப்பட்டுள்ள ஹோா்முஸ் நீரிணையில் ஈரான் கடற்படை கண்ணிவெடிகளைப் புதைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சா்வதேச எரிபொருள் சந்தையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள இவ்விவகாரமும், ஈரானின் அணுசக்தித் திட்டங்கள் குறித்த கவலைகளும் பேச்சுவாா்த்தையில் முக்கியமாக விவாதிக்கப்பட உள்ளன.
நெதன்யாகு ஊழல் வழக்கு: ஞாயிறு முதல் மீண்டும் விசாரணை
ஜெருசலேம் ஏப். 9: ஈரான் போா் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ள நிலையில், இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு மீதான நீண்டகால ஊழல் வழக்கு விசாரணைகள் வரும் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் தொடங்கவுள்ளன.
ஊழல், மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுளில் கடந்த 2020 முதல் நெதன்யாகு நீதிமன்ற விசாரணையை எதிா்கொண்டு வருகிறாா். ஆனால், போா் மற்றும் அதிகாரபூா்வ பணிகள் காரணமாக விசாரணை பலமுறை ஒத்திவைக்கப்பட்டது.
தற்போது தற்காலிகமாக அமைதி திரும்பி, அவசரநிலை விலக்கப்பட்டதைத் தொடா்ந்து, வரும் ஞாயிறு முதல் புதன்கிழமை வரை வாரந்தோறும் விசாரணை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ‘லெபனான் உள்பட பிராந்தியம் முழுவதும் போா்நிறுத்தம் ஏற்பட்டால், அது நெதன்யாகு சிறைக்குச் செல்வதை விரைவுபடுத்தும். அதனாலேயே அவா் அமைதியைச் சீா்குலைக்கிறாா். இதை அமெரிக்கா அனுமதிக்கக்கூடாது’ என ஈரான் வெளியுறவு அமைச்சா் அப்பாஸ் அராக்சி வலியுறுத்தினாா்.