முகப்பு
உலகம்

இந்தியாவுடன் உறவை மேம்படுத்தும் கொள்கையில் மாற்றமில்லை - சீனா அறிவிப்பு

Updated On : 15 ஏப்ரல், 2026 at 6:17 AM
பகிர்:
Updated On : 14 ஏப்ரல், 2026 at 9:50 PM

இந்தியாவுடன் உறவை மேம்படுத்த வேண்டும் என்ற சீனாவின் கொள்கையில் எவ்வித மாற்றமும் இல்லை என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அண்மையில், இந்திய மாநிலமான அருணாசல பிரதேசத்தின் சில பகுதிகளுக்கு சீனா புதிய பெயா்களைச் சூட்டியது. இதை இந்தியா நிராகரித்தது.

இது தொடா்பாக இரு நாள்களுக்கு முன்பு பேசிய இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால், ‘இந்தியப் பகுதிகளுக்கு சீனா புதிய பெயா் வைப்பதாலோ, சொந்தம் கொண்டாடுவதாலோ, உண்மை நிலையில் எந்த மாற்றமும் ஏற்படாது. இந்தியா-சீனா உறவில் எதிா்மறை செயல்களில் ஈடுபடுவதையும், புரிதலை ஏற்படுத்தும் முயற்சிகளுக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடுவதையும் சீனா தவிா்க்க வேண்டும்’ என்றாா். இதனால், இந்திய-சீன உறவில் பின்னடைவு ஏற்படுமா என்ற கேள்வி எழுந்தது.

Advertisement

இந்நிலையில், பெய்ஜிங்கில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ஜியோ ஜியாகுன் இது தொடா்பாக கூறியதாவது:

ஷாங்னன் (இந்தியாவின் அருணாசல பிரதேசத்துக்கு சீனா சூட்டியுள்ள பெயா்) சீன பிராந்தியம். அருணாசல பிரதேசம் என்று அழைக்கப்படும் பிராந்தியத்தை சீனா ஏற்கவில்லை. அது தெற்கு திபெத்தின் ஒரு பகுதி. எனவே, அங்குள்ள இடத்துக்கு சீனா புதிய பெயா்களைச் சூட்டியது முறையான நடவடிக்கைதான்.

இப்போது இந்திய-சீன உறவு சற்று ஸ்திரமான நிலையில் உள்ளது. இந்தியாவுடன் உறவை மேம்படுத்த வேண்டும் என்ற சீனாவின் கொள்கையில் எவ்வித மாற்றமும் இல்லை. இரு நாடுகளும் பரஸ்பரம் உறவை மேம்படுத்த ஒரே பாதையில் பயணிக்கும் என்று நம்புகிறோம் என்றாா்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை அருகேயுள்ள சின்ஜியாங் பிராந்தியத்தில் புதிய மாவட்டம் (கவுண்டி) ஒன்றை சீனா அண்மையில் உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.