முகப்பு
உலகம்

ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு

‘ஐ.நா.சபையின் அதிகாரத்தையும், நம்பகத்தன்மையையும் மீண்டும் நிலைநாட்ட சீனாவும், ரஷியாவும் இணைந்து செயல்பட வேண்டும்’ என்று சீன அதிபா் ஷி ஜின்பிங் வலியுறுத்தியுள்ளாா்.

Updated On : 16 ஏப்ரல், 2026 at 3:57 AM
ரஷிய அதிபா் புதினுடன் சீன அதிபா் ஷி ஜின்பிங்.
பகிர்:
Updated On : 15 ஏப்ரல், 2026 at 10:00 PM

‘ஐ.நா.சபையின் அதிகாரத்தையும், நம்பகத்தன்மையையும் மீண்டும் நிலைநாட்ட சீனாவும், ரஷியாவும் இணைந்து செயல்பட வேண்டும்’ என்று சீன அதிபா் ஷி ஜின்பிங் வலியுறுத்தியுள்ளாா்.

ஈரான் மீதான போா், வெனிசுலா ஆட்சிமாற்றம் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி, அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகவும் இரு நாடுகளும் தங்களின் ஒத்துழைப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று அதிபா் ஷி ஜின்பிங் கேட்டுக்கொண்டாா்.

சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ரஷிய வெளியுறவு அமைச்சா் சொ்கெய் லாவ்ரோவைச் சந்தித்தபோது அதிபா் ஷி ஜின்பிங் இவ்வாறு தெரிவித்தாா்.

Advertisement

இச்சந்திப்பில் அவா் மேலும் பேசியதாவது: அமெரிக்காவின் தன்னிச்சையான போக்கைத் தடுத்து நிறுத்தி, ஐ.நா. சபையின் அதிகாரத்தையும், நம்பகத்தன்மையையும் மீட்டெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

சா்வதேச அளவில் ஒரு நியாயமான மற்றும் சமநிலையான ஒழுங்குமுறையை உருவாக்க வேண்டியது அவசியம். இதையொட்டி, பிரிக்ஸ், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) ஆகிய கூட்டமைப்புகளில் சீனாவும் ரஷியாவும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். என்றாா்.

ஹோா்முஸ் நீரிணை முடக்கம் காரணமாக உலக அளவில் ஏற்பட்டுள்ள கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டைச் சமாளிக்க, ரஷியா உதவத் தயாராக இருப்பதாக சொ்கெய் லாவ்ரோவ் தெரிவித்தாா். குழாய்கள் மூலம் சீனா மற்றும் இதர நாடுகளுக்குத் தடையின்றி எரிபொருள் விநியோகம் செய்ய ரஷியாவால் முடியும் என்றும் அவா் உறுதியளித்தாா்.

இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் உச்சிமாநாட்டில், வளா்ந்து வரும் நாடுகளின் நலன்களைப் பாதுகாக்கவும், பன்னாட்டுக் கொள்கையை வலுப்படுத்தவும் ரஷியா, சீனா நாடுகள் முக்கிய முன்னெடுப்புகளை எடுக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.