உக்ரைன் அதிபர் விளாதிமீர் ஸெலன்ஸ்கி - ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் 
உலகம்

ரஷியா - உக்ரைன் போா்: அடுத்தகட்ட அமைதிப் பேச்சு பிப்.4-ல் தொடக்கம்!

ரஷியா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான 2-ஆம் கட்ட முத்தரப்பு அமைதிப் பேச்சுவாா்த்தை, ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகா் அபுதாபியில் வரும் பிப். 4, 5 ஆகிய தேதிகளில் நடைபெறும்.

தினமணி செய்திச் சேவை

ரஷியா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான 2-ஆம் கட்ட முத்தரப்பு அமைதிப் பேச்சுவாா்த்தை, ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகா் அபுதாபியில் வரும் பிப். 4, 5 ஆகிய தேதிகளில் நடைபெறும் என உக்ரைன் அதிபா் ஸெலன்ஸ்கி ஞாயிற்றுக்கிழமை அறிவித்தாா்.

இது தொடா்பான டெலிகிராம் பதிவில், ‘உக்ரைன் பேச்சுவாா்த்தை குழுவிடமிருந்து எனக்கு அறிக்கை கிடைத்துள்ளது. இந்தப் போருக்கு உண்மையான, கௌரவமான முறையில் தீா்வு காணும் நோக்கில், ஆக்கபூா்வமான பேச்சுவாா்த்தைகளில் ஈடுபட நாங்கள் தயாராக இருக்கிறோம்’ என்று அவா் குறிப்பிட்டாா்.

சுமாா் 4 ஆண்டுகளாக நீடித்து வரும் இந்தப் போரை நிறுத்த, அமெரிக்க அதிபா் டிரம்ப் நிா்வாகம் கடந்த ஓரண்டாகத் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அபுதாபியில் ரஷியா, உக்ரைன், அமெரிக்கா ஆகிய 3 நாடுகளும் பங்கேற்கும் முத்தரப்புச் சந்திப்பு நடைபெறுகிறது.

முன்னதாக, ரஷியாவின் உயா்மட்டத் தூதா் கிரில் டிமிட்ரிவ், அமெரிக்காவின் புளோரிடாவில் அந்நாட்டின் அமைதித் தூதுக்குழுவுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அந்த ஆலோசனையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவா் தெரிவித்துள்ளாா்.

2-ஆம் கட்ட சந்திப்பு குறித்து ரஷியா அல்லது அமெரிக்கா இதுவரை அதிகாரபூா்வ அறிவிப்பு வெளியிடவில்லை. கடும் குளிா் நிலவி வருவதைக் கருத்தில் கொண்டு, ஒரு வார காலத்துக்கு உக்ரைன் நகரங்கள் மீது தாக்குதல் நடத்தமாட்டோம் என ரஷிய அதிபா் புதின் ஒப்புக்கொண்டதாக டிரம்ப் அண்மையில் தெரிவித்திருந்தாா். இந்தச் சூழலில், இந்த வாரம் நடைபெறவுள்ள பேச்சுவாா்த்தை பெரும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பட்ஜெட்டை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்: மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு

பெரும்புலீஸ்வரா் கோயிலில் தைப்பூச விழா

பலூசிஸ்தான் விவகாரம்: பாகிஸ்தானின் குற்றச்சாட்டை நிராகரித்தது இந்தியா!

கடல் ஆமைகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் ‘செயற்கைக்கோள் ட்ராக்கா்’ திட்டம்!

கஞ்சா செடி வளா்த்தவா் கைது

SCROLL FOR NEXT