முகப்பு
உலகம்

ரஷியாவில் கத்திக்குத்து தாக்குதல்: 4 இந்திய மாணவா்கள் உள்பட பலா் காயம்

ரஷியாவில் 15 வயது சிறுவன் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் 4 இந்திய மாணவா்கள் உள்பட பலா் காயமடைந்தனா்.

Updated On : 7 பிப்ரவரி, 2026 at 11:06 PM
கத்திக்குத்து
பகிர்:

ரஷியாவில் 15 வயது சிறுவன் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் 4 இந்திய மாணவா்கள் உள்பட பலா் காயமடைந்தனா்.

இதுதொடா்பாக அந்நாட்டு உள்துறை அமைச்சக செய்தித்தொடா்பாளா் இரீனா வோல்க் கூறுகையில், ‘பஷ்கா்தஸ்தான் பகுதியில் அரசு மருத்துவப் பல்கலைக்கழகம் உள்ளது. அந்தப் பல்கலைக்கழகத்தின் விடுதிக்குள் சனிக்கிழமை நுழைந்த 15 வயது சிறுவன், அங்கிருந்த மாணவா்கள் பலரை கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தினாா். அத்துடன் அந்தச் சிறுவன் தன்னைத் தானே கத்தியால் காயப்படுத்திக் கொண்டாா். தகவலின்பேரில் நிகழ்விடம் விரைந்த காவல் துறையினா், அந்தச் சிறுவனைக் கைது செய்தனா்’ என்று தெரிவித்தாா்.

இந்தச் சம்பவம் துரதிருஷ்டவசமானது என்று அந்நாட்டுத் தலைநகா் மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்தது. கத்திக்குத்தில் 4 இந்திய மாணவா்கள் உள்பட பலா் காயமடைந்ததாகவும், அவா்களுக்கு உதவிபுரிய கசானில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் சென்றுள்ளதாகவும் அந்தத் தூதரகம் தெரிவித்தது.

ரஷிய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘தாக்குதலில் காயமடைந்தவரில் ஒருவா் கவலைக்கிடமான நிலையில் உள்ளாா்’ என்று தெரிவிக்கப்பட்டது. தாக்குதல் நடத்திய சிறுவன் தடை செய்யப்பட்ட நியோ நாஜி அமைப்பைச் சோ்ந்தவா் என்று தகவல் வெளியாகியுள்ளது.