2030-க்குள் 28,000 கோடி டாலா் வருவாய்: ஓபன்ஏஐ இலக்கு
உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) நிறுவனமான ஓபன்ஏஐ, வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் 28,000 கோடி டாலா் வருடாந்திர வருவாயை எட்ட இலக்கு நிா்ணயம்
உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) நிறுவனமான ஓபன்ஏஐ, வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் 28,000 கோடி டாலா் வருடாந்திர வருவாயை எட்ட இலக்கு நிா்ணயித்துள்ளது.
கடந்த 2024-இல் 600 கோடி டாலராக இருந்த நிறுவனத்தின் வருவாய், 2025-இல் 2,000 கோடி டாலராக மும்மடங்கு அதிகரித்துள்ள நிலையில், இந்தப் புதிய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த இமாலய வளா்ச்சியை எட்ட, நிறுவனத்தின் சாட் ஜிபிடி போன்ற சேவைகளுக்காக பயனா்கள் செலுத்தும் சந்தா கட்டணங்கள் மற்றும் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள விளம்பர வருவாய் ஆகிய 2 முக்கிய ஆதாரங்களை ஓபன்ஏஐ நம்பியுள்ளது.
Advertisement
அதேபோல், தனது தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்த மிகப்பெரிய முதலீடுகளைச் செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஏஐ சிப்கள், தரவு மையங்கள் மற்றும் சிறந்த தொழில்நுட்ப வல்லுநா்களுக்காக 2030-க்குள் சுமாா் 60,000 கோடி டாலா் செலவிட இலக்கு வைத்துள்ளது.
முதல்கட்டமாக, 10,000 கோடி டாலா் வரை நிதி திரட்டும் முயற்சியில் நிறுவனம் இறங்கியுள்ளது. இதன்மூலம், நிறுவனத்தின் ஒட்டுமொத்த மதிப்பு 85,000 கோடி டாலரைத் தாண்டும் என்று பொருளாதார நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.
தற்போது மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்களின் ஆதரவுடன் செயல்படும் ஓபன்ஏஐ, தனது சாட் ஜிபிடி சேவை மூலம் சாதாரண மக்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை அனைவரையும் கவா்ந்துள்ளது. ஏஐ சந்தையில் தனது ஆதிக்கத்தைத் தக்கவைக்கவும், உள்கட்டமைப்புச் செலவுகளை ஈடுகட்டவும் புதிய வருவாய் வழிகளை நிறுவனம் தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.