இஸ்ரேலுக்குச் செல்லும் பிரதமர் மோடி: நெதன்யாகுவுடன் புதன்கிழமை சந்திப்பு!
இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்
பிரதமர் மோடி இஸ்ரேலுக்குப் புதன்கிழமை செல்கிறார். இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் அவர் புதன்கிழமை உரையாற்றுகிறார். இந்தத் தகவலை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.
இது குறித்து, இஸ்ரேல் பிரதமர் தமது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை (பிப். 25) இஸ்ரேலுக்கு வருகை தரவுள்ளதாகவும், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அவர் உரையாற்றப் போவதாகவும் குறிப்பிட்டிருப்பதுடன், இருநாட்டுத் தலைவர்களும் கூட்டாக ஜெருசலேமில் புத்தாக்க நிகழ்ச்சியொன்றில் கலந்துகொள்ளப் போவதாகவும் அதனைத்தொடர்ந்து, யாட் வஷேமுக்குச் செல்லவிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவை உலகின் சக்தி வாய்ந்த நாடுகளில் ஒன்றெனக் குறிப்பிட்டுள்ள நெதன்யாகு, பிரதமர் மோடியை தமது தனிப்பட்ட நண்பர் என்றும் அந்தப்பதிவில் குறிப்பிட்டார்.
Advertisement
கடந்த 2017-இல் இஸ்ரேல் சென்ற பிரதமர் மோடி, இதுவரை எந்தவொரு இந்தியப் பிரதமரும் செய்யாத வரலாற்று நிகழ்வாக இரண்டாவது முறையாக அந்நாட்டுக்குப் பயணம் செய்யவுள்ளார். இதையடுத்து, பிப். 25, 26 ஆகிய இரு நாள்கள் இஸ்ரேலில் சுற்றுப்பயணம் செய்யும் பிரதமர் மோடியின் பயணம் சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெறுகிறது.
இந்தப் பயணத்தின்போது, ‘ஹெக்ஸாகன்’ என்றழைக்கப்படும் மத்திய கிழக்குப் பகுதியில் இஸ்ரேல் முன்னெடுத்துள்ள தோழமை நாடுகளின் கூட்டமைப்பில் இந்தியாவையும் சேர்த்துக்கொள்வதில் ஆர்வம் காட்டும் நெதன்யாகு, அது குறித்து ஆக்கப்பூர்வ ஆலோசனை நடைபெறும் என்றும் தெரிவித்தார்.