ஈரான் மீதான தாக்குதல் தொடரும்! இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு!
ஈரான் மீதான தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் அறிவித்திருப்பது பற்றி...
ஈரான் மீதான தாக்குதல் தொடரும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திங்கள்கிழமை அறிவித்துள்ளார்.
அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் நாடுகளிடையே கடந்த மூன்று வாரங்களாக நடைபெற்றுவந்த போர், தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்கள்கிழமை அறிவித்திருந்தார்.
அமெரிக்கா - ஈரான் இடையே போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், ஈரானிய மின் நிலையங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகளுக்கு எதிரான அனைத்து ராணுவத் தாக்குதல்களையும் ஐந்து நாள்களுக்கு ஒத்திவைக்குமாறு போர் அமைச்சகத்திற்கு அறிவுறுத்தியிருப்பதாகவும் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், நாட்டு மக்களுக்கு உரையாற்றிய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்ததாவது:
”இன்று காலை அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் நான் பேசினேன்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராணுவம் அடைந்துள்ள மகத்தான வெற்றியின் மூலம், நமது முக்கிய நலன்களைப் பாதுகாப்பும் ஓர் ஒப்பந்தத்தை நிறைவேற்ற ஒரு வாய்ப்பு இருப்பதாக அதிபர் டிரம்ப் நம்புகிறார்.
இதனிடையே, ஈரான் மற்றும் லெபனான் ஆகிய நாடுகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவோம். அவர்களின் ஏவுகணைத் திட்டங்களையும், அணுசக்தித் திட்டங்களையும் நாம் நசுக்கி வருகிறோம். மேலும் ஹிஸ்புல்லா மீது கடுமையான தாக்குதலை தொடர்ந்து வருகிறோம்.
சில நாள்களுக்கு முன்பு, மேலும் இரண்டு அணு விஞ்ஞானிகளை கொன்றோம். மேலும், தாக்குதல் தொடரும். எந்தச் சூழ்நிலையிலும் நமது நலன்களை நாம் பாதுகாப்போம்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.