ஈரானின் பெட்ரோ கெமிக்கல் உற்பத்தி நிலையங்களைத் தாக்கிய இஸ்ரேல்!
ஈரானின் பெட்ரோ கெமிக்கல் உற்பத்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது குறித்து...
ஈரானின் பெட்ரோ கெமிக்கல் உற்பத்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் திங்கள்கிழமை (ஏப். 6) தாக்குதல் நடத்தியது.
ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா இடையே கடந்த பிப்.28 ஆம் தேதி தொடங்கிய தாக்குதல்கள் தற்போதுவரை தொடர்ந்து வருகின்றன. இதனால் உலகின் பல நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளவும், ஹோர்முஸ் நீரிணையைத் திறக்கவும் அமெரிக்க அதிபர் விடுத்த காலக்கெடுவையும் ஈரான் நிராகரித்தது.
Advertisement
இந்த நிலையில், “ஈரானின் பெட்ரோ கெமிக்கல் உற்பத்தியில் சுமார் 50 சதவிகிதத்தை உற்பத்தி செய்துவந்த அந்நாட்டின் மிகப்பெரிய பெட்ரோ கெமிக்கல் நிலையத்தின் மீது இஸ்ரேலிய படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன” என இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை உறுதிசெய்த ஈரான் அரசு, ”ஈரானின் மிகப்பெரிய பெட்ரோ கெமிக்கல் நிலையத்தை திங்கள்கிழமை தாக்கியதில், அந்தப் பகுதியில் உள்ள சிறப்புப் பொருளாதார எரிசக்தி மண்டலத்தின் ஒரு பகுதி சேதமடைந்தது. இருப்பினும், உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை” எனத் தெரிவித்தது.
மேலும், கடந்த வாரத்தில் ஈரானின் இரண்டாவது பெரிய பெட்ரோ கெமிக்கல் நிறுவனத்தை இஸ்ரேல் தாக்கியிருந்த நிலையில் ஈரானின் 85 சதவிகித பெட்ரோ கெமிக்கல் உற்பத்தியை அழித்துள்ளதாக அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.