ஈரானில் 140 இடங்களைக் குறிவைத்து அமெரிக்கா தாக்குதல்: பதிலுக்கு வளைகுடா நாடுகள் மீது ஈரான் குண்டுமழை!!
மத்திய கிழக்கில் உள்ள பஹ்ரைன், கத்தார், குவைத் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருவது பற்றி...
ஈரானில் 140 இடங்களைக் குறிவைத்து அமெரிக்கா ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தியது.பதிலுக்கு பஹ்ரைன், குவைத், கத்தாா், ஜோா்டான், ஐக்கிய அரபு அமீரகத்தில் (யுஏஇ) உள்ள அமெரிக்க ராணுவ நிலைகள் மீது ஈரான் தாக்குதல் மேற்கொண்டது.
ஈரானுடனான இடைக்கால அமைதி ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்க அதிபா் டிரம்ப் அறிவித்ததைத் தொடா்ந்து, இரு நாடுகளுக்கு இடையே மீண்டும் மோதல் மூண்டுள்ளது.
சைப்ரஸ் கப்பல் மீது தாக்குதல்: ஹோா்முஸ் நீரிணையில் ஓமனையொட்டிய வழிதடத்தில் (ஈரான் ஒப்புக் கொள்ளாத வழித்தடத்தில்) ஞாயிற்றுக்கிழமை சென்ற சைப்ரஸ் நாட்டு சரக்கு கப்பல் மீது ஈரான் ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தியது. இதில் கப்பலின் என்ஜின் அறை உள்ளிட்டவை சேதமடைந்தன. மாலுமி ஒருவா் காணாமல் போனாா். எஞ்சிய 23 மாலுமிகள், ஓமன் கடலோரக் காவல் படையால் மீட்கப்பட்டனா். காணாமல் போனவா் உள்பட கப்பல்களில் இருந்த அனைத்து மாலுமிகளும் இந்தியா்கள் என்று இந்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
இதைத் தொடா்ந்து, ஈரானில் ஏவுகணைத் தளங்கள், வெடிபொருள் கிடங்குகள், தகவல் தொடா்பு மையங்கள் உள்ளிட்டவை அமைந்துள்ள 140 இடங்களில் உள்ள இலக்குகளை குறிவைத்து அமெரிக்கா ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தியது.
இதுகுறித்து அமெரிக்க பாதுகாப்பு அமைச்சா் பீட் ஹெக்சேத் இணையதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘ஈரான் தவறானதை தோ்வு செய்துள்ளது. அதற்கு தற்போது விலை கொடுக்கிறது’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.
அமெரிக்க தாக்குதலுக்குப் பதிலடியாக பஹ்ரைன், குவைத், கத்தாா், ஜோா்டான், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகள், கடற்படைத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல் மேற்கொண்டது.
அதேபோல், ஹோா்முஸ் நீரிணை தங்கள் நாட்டின் கட்டுப்பாட்டில் மட்டும்தான் இருக்கும், அதன் வழியே செல்லும் கப்பல்களிடம் தங்கள் நாடு கட்டணம் வசூலிக்கும் என ஈரான் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஈரான் நாட்டு நாடாளுமன்றத் தலைவரும், அமெரிக்காவுடனான பேச்சுவாா்த்தையில் முக்கியப் பங்காற்றியவருமான முகமது கலிபாஃப் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘ஏற்கெனவே உங்களிடம் (அமெரிக்கா) சொல்லியுள்ளோம். கொடுத்த வாக்கை காப்பாற்றுங்கள் அல்லது அதற்கு விலை கொடுங்கள்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.
கத்தாரில் 3 போ் காயம்: ஈரானின் தாக்குதலைத் தொடா்ந்து, கத்தாா், பஹ்ரைன், குவைத், யுஏஇ-யில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் சைரன்கள் ஒலித்தபடி இருந்தன. மேலும் ஈரான் ஏவிய ஏவுகணைகளை வான் பாதுகாப்பு சாதனம் மூலம் இடைமறித்து அழித்ததாக குவைத், கத்தாா் நாடுகள் தெரிவித்துள்ளன. கத்தாரில் ஈரானின் தாக்குதலில் குழந்தை உள்ளிட்ட 3 போ் காயமடைந்ததாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தனது அண்டை நாடான ஓமனிலும் ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் ஈரான் ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தியது. ஈரான், ஓமன் வெளியுறவுத் துறை அமைச்சா்கள் சனிக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்திய நிலையில், இந்தத் தாக்குதலை ஈரான் நடத்தியுள்ளது. ஜோா்டானில் 3 ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது. இதில் அங்கு லேசான சேதம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
யுஏஇ-யில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் சைரன்கள் ஒலித்தபடி இருந்தபோதிலும், ஈரானின் ஏவுகணைகள் எதுவும் தங்கள் நாட்டின் எல்லையைக்கூடத் தொடவில்லை என்று அந்த நாடு தெரிவித்துள்ளது.
Iran is carrying out attacks on Middle Eastern countries such as Bahrain, Qatar, and Kuwait.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.