ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்
ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும் என பாகிஸ்தான் தெரிவித்தது குறித்து...
ஈரான் உடான அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததையடுத்து, ஈரான் - அமெரிக்கா இடையேயான மத்தியஸ்தம் தொடரும் என பாகிஸ்தான் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.12) தெரிவித்துள்ளது.
ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா இடையேயான போர் கடந்த பிப்.28 ஆம் தேதி தொடங்கியது. தாக்குதல்கள் தொடர்ந்த நிலையில் ஈரானுடன் இரண்டு வார கால போர்நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை (ஏப்.8) அதிகாலையில் அறிவித்தார்.
இந்தப் போரை முழுமையாக நிறுத்த அமெரிக்கா-ஈரான் இடையே பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்து வரும் நிலையில் ஏப்ரல் 10 ஆம் தேதி ஈரான் மற்றும் அமெரிக்க குழுக்களை பாகிஸ்தான் வருமாறு அந்நாட்டு பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் அழைப்பு விடுத்தார். இதனையடுத்து, சனிக்கிழமை (ஏப்.11) பேச்சுவார்த்தை தாமதமாகத் தொடங்கியது.
Advertisement
Advertisement
சுமார் 21 மணிநேரம் தொடர்ந்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாமல் தோல்வியில் முடிந்ததாக அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தெரிவித்தார்.
இந்த நிலையில், இரு தரப்புக்கும் இடையேயான தற்போதைய உயர்நிலைப் பேச்சுவார்த்தை எந்தவொரு திருப்புமுனையும் இன்றி முடிவடைந்த போதிலும், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையை தொடர்ந்து எளிதாக்கப் போவதாக பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏறக்குறைய 24 மணி நேரப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு ஊடகங்களிடம் பேசிய பாகிஸ்தான் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் தார்,
“தூதுக் குழுக்களுக்கு இடையேயான தீவிரமான மற்றும் ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல்களுக்கு இஸ்லாமாபாத் மத்தியஸ்தம் செய்தது.
நானும், பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதியும் இணைந்து, இரவு முழுவதும் தொடர்ந்து பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்கு வழிவகுத்தததோடு ஞாயிற்றுக்கிழமை காலை வரை தொடர்ந்தது.
மேலும், சமீபத்தில் அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தத்தை இரு தரப்பினரும் கடைப்பிடிக்க வேண்டும். வரும் நாள்களில் தெஹ்ரானுக்கும் வாஷிங்டனுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவளிக்கும்” எனத் தெரிவித்தார்.
1979 இஸ்லாமிய புரட்சிக்குப் பிறகு அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிகழும் முதல் நேரடி சந்திப்பாக நடந்த இந்தப் பேச்சுவார்த்தை அமைந்தது குறிப்பிடத்தக்கது.
Following the failure of the recently concluded peace talks, Pakistan stated on Sunday (April 12) that its mediation between Iran and the United States would continue.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.