ஈரானை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வழிநடத்தட்டும் என ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி தெரிவித்துள்ளார்.
ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டக்காரர்களுடன் துணை நிற்பேன் என டிரம்ப் கூறிவரும் நிலையில், ஈரான் அரசு எதைச் செய்தாலும் விமர்சிக்கும் டிரம்ப், அவ்வளவு திறமையானவராக இருந்தால் ஈரானை ஆட்சி செய்யட்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானில் பணவீக்கம் அதிகரித்துள்ளதால், மக்களில் பொருளாதாரச் சூழல் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அன்றாட செலவே அதிகரித்து காணப்படுவதால், ஆத்திரமடைந்துள்ள மக்கள், கடந்த ஆண்டு டிசம்பா் இறுதியில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
அத்துடன் 1979-ஆம் ஆண்டு அந்நாட்டில் இஸ்லாமிய புரட்சி நடைபெற்றது முதல், ஈரானில் மதகுருக்கள் ஆட்சி செய்து வரும் மரபை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்ற குரல்களும் வலுக்கத் தொடங்கியுள்ளன.
ஈரானில் உள்ள 31 மாகாணங்களில் 22 மாகாண மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தின் எதிரொலியாக இணைய சேவை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. மக்கள் குரலை முடக்கும் வகையில் ஈரான் அரசு செயல்படுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது.
அதாவது, தலைநகரான டெஹ்ரானில் மக்கள் போராட்டம் வெடித்துள்ள நிலையில், அங்கு போராட்டம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக ஈரான் ஊடகங்கள் செய்திகளை வெளியிடுவதாக அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
அத்தோடு, ஈரானில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அமெரிக்கா துணை நிற்கும் என்றும், போராட்டக்காரர்கள் மீது ஈரான் படைகள் தாக்குதல் நடத்தினால், அமெரிக்கா களமிறங்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில், தனது எக்ஸ் தளப் பக்கத்தில் கமேனி பதிவிட்டுள்ளதாவது,
''ஈரானிய அரசாங்கம் இதைச் செய்தாலும் சரி, அதைச் செய்தாலும் சரி, போராட்டக்காரர்களுடன் சேர்ந்து கொள்வேன் என்று அமெரிக்க அதிபர் அறிவித்தார். போராட்டக்காரர்கள் அவர் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். அவர் (டிரம்ப்) அவ்வளவு திறமையானவராக இருந்தால், ஈரானை வழிநடத்தட்டும்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.