அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பயணித்த ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீண்டும் வாஷிங்டனில் தரையிறக்கப்பட்டுள்ளது.
ஸ்விட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெறும் உலகப் பொருளாதார மன்றத்தில் கலந்துகொள்வதற்காக செவ்வாய்க்கிழமை இரவு (உள்ளூர் நேரப்படி) வாஷிங்டனில் இருந்து அதிபர் டிரம்ப் உள்ளிட்டோர் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் புறப்பட்டனர்.
இந்த விமானம் புறப்பட்ட ஒரு மணிநேரத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீண்டும் வாஷிங்டனில் தரையிறக்கப்பட்டது.
இதுகுறித்து வெள்ளை மாளிகையின் பத்திரிகைச் செயலாளர் கரோலின் லீவிட் கூறியதாவது, “சிறிய மின்சாரக் கோளாறு கண்டறியப்பட்டதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானம் திரும்பி வந்துள்ளது. விமானம் புறப்பட்ட பிறகே மின்சாரக் கோளாறு ஏற்பட்டது” எனத் தெரிவித்தார்.
விமானத்தில் பயணித்த பத்திரிகையாளர் ஒருவர் கூறுகையில், “விமானம் புறப்பட்ட பிறகு பத்திரிகையாளர்கள் அறையில் உள்ள விளக்குகள் அணைந்தது. உடனடியாக எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. சுமார் அரை மணிநேரத்துக்குப் பிறகு விமானம் மீண்டும் வாஷிங்டன் செல்லவிருப்பதை தெரிவித்தனர்” என்றார்.
இதனைத் தொடர்ந்து, மாற்று விமானமான ஏர் ஃபோர்ஸ் சி-32 மூலம் ஸ்விட்சர்லாந்துக்கு அதிபர் டிரம்ப் உள்ளிட்டோர் புறப்பட்டுச் சென்றனர். ஏர் ஃபோர்ஸ் சி-32 விமானமானது, உள்நாட்டுப் பயணங்களுக்கும், சிறிய விமான நிலையங்களில் தரையிறங்குவதற்கும் அதிபர் டிரம்ப் பயன்படுத்துவதாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.