முகப்பு
உலகம்

தேச துரோக வழக்கில் ஹசீனா மீது பிப்.9 குற்றச்சாட்டுகள் பதிவு - வங்கதேச நீதிமன்றம் உத்தரவு

Updated On : 22 ஜனவரி, 2026 at 5:55 AM
ஷேக் ஹசீனா - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 21 ஜனவரி, 2026 at 9:55 PM

தேச துரோக வழக்கில் வங்கதேச முன்னாள் பிரதமரும் அவாமி லீக் கட்சித் தலைவருமான ஷேக் ஹசீனா உள்ளிட்டோருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பதிவை பிப்ரவரி 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, அந்நாட்டு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

வங்கதேசத்தில் மாணவா்கள் போராட்டத்தைத் தொடா்ந்து 2024, ஆகஸ்ட் மாதம் பிரதமா் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு தப்பிச் சென்றாா். அதன்பிறகு வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால ஆட்சி நடைபெற்று வருகிறது.

அதை சீா்குலைத்து மீண்டும் ஹசீனா தலைமையிலான ஆட்சியை கொண்டு வர 2024, டிசம்பா் மாதம் ஹசீனா உள்பட 577 போ் காணொலி வாயிலாக சதித்திட்டம் தீட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

Advertisement

இதுதொடா்பாக சிஐடி துணை காவல் கண்காணிப்பாளா் முகமது இனாமுல் ஹேக் நடத்திய விசாரணையில் ஹசீனா, ரப்பி ஆலம் உள்பட 72 போ் மீது முதற்கட்டமாக 2025, மாா்ச் 27-ஆம் தேதி டாக்கா சிறப்பு நீதிமன்றத்தில் தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அதைத்தொடா்ந்து, ஹசீனா உள்பட 286 போ் மீது நீதிமன்றத்தில் முகமது இனாமுல் ஹேக் 2025, ஆகஸ்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தாா். அதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ள அனைவரையும் கைது செய்வதற்கான ஆணையை பிறப்பித்தது.

Updated On : 22 ஜனவரி, 2026 at 12:59 AM

குற்றவாளிகள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராகக் கோரி பத்திரிகை வாயிலாக நோட்டீஸ் பிறப்பிக்கவும் 2025, அக்டோபரில் நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்தது.

இந்நிலையில், ஹசீனா உள்ளிட்டோா் மீதான குற்றச்சாட்டுகள் பதிவை பிப்ரவரி 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, டாக்கா நீதிமன்ற சிறப்பு நீதிபதி முகமது அப்துஸ் சலாம் புதன்கிழமை உத்தரவிட்டதாக ஊடக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனக்கு எதிரான போராட்டத்தை கட்டுப்படுத்த மாணவா்கள் மீது கடுமையாக தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்து சிறப்பு தீா்ப்பாயம் ஏற்கெனவே தீா்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.